கோவில்பட்டி பத்திரகாளி அம்மன் கோவில் சித்திரை திருவிழா தொடங்கியது
கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத்துக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று (29-ந்தேதி) தொடங்கியது.
இதையொட்டி அதிகாலை 5.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.
நாடார் உறவின்முறை சங்க தலைவர், கோவில் தர்மகர்த்தா, நிர்வாக குழு உறுப்பினர்கள்,மண்டகபடிதாரர்கள், மஞ்சள் நீராட்டு குழு இளைஞர்கள் மேளதாளம் முழங்க ஊர்வலமாக வந்தனர்.
இதற்கு இடையே கோவில் தங்க கொடி மரத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.ஏராளமான பக்தர்கள் கூடி இருந்தனர். கொடி மரத்துக்கு தீபாராதனை காட்டியபோது பெண்கள் குலவை இட்டனர்.
காலை 6 மணிக்கு மேல் 7.29 மணிக்குள் கொடியேற்றம் நடந்து முடிந்தது. கொடியேற்றத்தை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
தங்க கொடிமரத்துக்கு பெண்கள் பால், தண்ணீர் ஊற்றி அம்மனை வழிபட்டனர்
இன்றைய மண்டகப்படிதாரர் நாடார் தேங்காய், பழம், காய்கனி வியாபாரிகள் சங்கத்தினர்.
இரவு 7 மணிக்கு கோவில் கலையரங்கத்தில், “வாரியாரும் வள்ளலாரும் “ என்ற தலைப்பில் முனைவர் சி.தேவி சொற்பொழிவு ஆற்றுகிறார்.
8 மணிக்கு அடைக்கலம் காத்தான் மண்டபத்தில் டி.வி.புகழ் மலர்விழி மற்றும் டி.வி.கலைஞர்கள் வழங்கும் இசை பட்டிமன்றம் நடக்கிறது. “ அன்றிலிருந்து இன்று வரை பெண்களுக்கு ஆண்கள் கதாநாயகனா? காமெடியனா? என்ற தலைப்பில் உரையாடல் நடக்கும்.
இன்று தொடங்கிய சித்திரை திருவிழா மே 8 ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது.
ஒவ்வொரு நாளும் இரவு 7 மணிக்கு அம்மன் வீதி உலா, இரவு 7.25 மணிக்கு கோவில் கலையரங்கில் பக்தி சொற்பொழிவு, இரவு 8 மணிக்கு மேல் அடைக்கலம் காத்தான் மண்டபத்தில் இன்னிசை நிகழ்ச்சி என கோலாகலமாக சித்திரை திருவிழா களை கட்ட இருக்கிறது.