மக்கள்நல பணியாளர்களுக்கு மீண்டும் பணி; தூத்துக்குடி கலெக்டர் அழைப்பு
![மக்கள்நல பணியாளர்களுக்கு மீண்டும் பணி; தூத்துக்குடி கலெக்டர் அழைப்பு](https://tn96news.com/wp-content/uploads/2022/06/hqdefault-1-850x560.jpg)
தூத்த்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:-
ஊரக வளர்ச்சி ஊராட்சித் துறையில் 8.11.2011 அன்று மக்கள் நலப்பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். பணிநீக்கம் செய்யப்பட்ட முந்தைய மக்கள் நலப்பணியாளர்களை தற்போது அரசு மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தில் வேலை உறுதித் திட்ட பணி ஒருங்கிணைப்பாளராக பணியில் ஈடுபட அரசு வாய்ப்பளித்துள்ளது.
இப்பணிக்கென மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்ட நிதியிலிருந்து ரூ.5 ஆயிரம் , கூடுதலாக கிராம ஊராட்சிப் பணிகளுக்காக ரூ.2500/- ஆக மொத்தம் ரூ.7500/- மாதம் ஒன்றுக்கு ஒட்டுமொத்த தொகுப்பூதியம் வழங்கப்படும்.
எனவே 8.11.2011 அன்று பணியிழந்த இப்பணியில் ஈடுபட விருப்பம் உள்ள முன்னாள் மக்கள் நலப்பணியாளர்கள் தாங்கள் ஏற்கனவே பணிபுரிந்த வட்டாரத்தின் வட்டார வளர்ச்சி அலுவலரை (கிராம ஊராட்சி) தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் இது தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலரிடம் (கிராம ஊராட்சி) ஏற்கனவே பணியாற்றியதற்கான விவரத்துடன் பணியில் ஈடுபடவுள்ளதற்கான விருப்பக் கடிதத்தினையும் வட்டார திட்ட ஒருங்கிணைப்பாளர் / வட்டார வளர்ச்சி அலுவலரிடம் (கிராம ஊராட்சி) 13.6.2022 முதல் 18.6.2022-க்குள் வழங்கலாம்.
அவ்வாறு பணியில் ஈடுபட விருப்பம் தெரிவிப்பவர்களது விருப்ப கடிதம் பரிசீலிக்கப்பட்டு 1.7.2022 முதல் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படும்.
எனவே 8.11.2011 அன்று பணிநீக்கம் செய்யப்பட்ட முந்தைய மக்கள் நலப் பணியாளர்கள் இப்பணி வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள 13.6.2022 முதல் 18.6.2022க்குள் தவறாமல் தங்களது விருப்பத்தினை தெரிவிக்குமாறும், விருப்ப விண்ணப்பங்கள் மட்டுமே இப்பணியில் ஈடுபட பரிசீலிக்கப்படவுள்ளதால் குறிப்பிட்ட காலத்திற்குள் விருப்பம் தெரிவிக்கவும், காலம் கடந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் பரிசீலிக்க இயலாது என்பதால் குறித்த காலத்தில் விண்ணப்பித்து இப்பணி வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது மேற்கண்டவாறு கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)