மாநிலங்களவை காங்கிரஸ் வேட்பாளர் ப.சிதம்பரம்; முதல் – அமைச்சரிடம் வாழ்த்து
தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை எம்.பி. பதவிக்கான தேர்தலை இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது. இதனையடுத்து வேட்புமனு தாக்கல் நடந்து வருகிறது.
தி.மு.க. சார்பில் கிரிராஜன், கல்யாண சுந்தரம், ராஜேஸ்குமார் ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டனர்.
அ.தி.மு.க. சார்பில் சி.வி.சண்முகம், தர்மர் ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 2 பேரும் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர். தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி, தமிழக மாநிலங்களவை காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தை அறிவித்தது. இதற்கான அறிவிப்பை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக் வெளியிட்டார்.
ப.சிதம்பரம் மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட உள்ள நிலையில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார். அப்போது அமைச்சர் சேகர் பாபு உடன் இருந்தார். ப.சிதம்பரத்துடன் அவரது மகன் கார்த்திக் சிதம்பரம் எம்.பி. சென்று இருந்தார்,
முதல்-அமைச்சர் சந்திப்புக்கு பிறகு ப.சிதம்பரம் தனது வேட்பு மனுவை சென்னை தலைமைச் செயலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரியும், சட்டப்பேரவை செயலாளருமான சீனிவாசனிடம் தாக்கல் செய்தார்.
அப்போது அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோர் உடன் இருந்தனர்