நிலம் பத்திரபதிவில் முறைகேடு: சார்பதிவாளர் பணி இடைநீக்கம்
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை சார்பதிவாளர் அலுவலகத்திற்கு உட்பட்ட தெற்கு சிலுக்கபட்டி, வடக்கு சிலுக்கன்பட்டி கிராமத்தை சுற்றி வீட்டு மனை மற்றும் விவசாய நிலம் சுமார் 2,200 ஏக்கர் தனிநபருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுக்கப்பட்டது.
இதில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி தெற்கு சிலுக்கன்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா மாவட்ட பதிவாளரை தொடர்பு கொண்டு பேசினார்.
இதை தொடர்ந்து நடந்த விசாரணையில் பத்திரபதிவில் தவறு நடந்திருப்பது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை சார்பதிவாளர் மோகன்தாஸ் தற்காலிக பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். மேலும் தனிநபருக்கு 2,200 ஏக்கர் நிலம் பதிவு செய்தது செல்லாது என்று ஆணை வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.