2-வது திருமணம் செய்த பெண் வெட்டிக்கொலை; தந்தை ஆத்திரம்
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே தாதன்குளத்தை சேர்ந்தவர் சுடலைமுத்து, இவர் தற்போது பாளையங்கோட்டையில் வசித்து வருகிறார். இவரது மகள் மீனா கடந்த 7 வருடங்களுக்கு முன்பு கால்வாய் கிராமத்தைச் சேர்ந்த இசக்கிப்பாண்டியன் என்பவரை காதலித்து திருமணம் செய்தார்.
அவர்களுக்கு நிஷாந்த் என்ற 4 வயதில் மகன் உள்ளான். இந்த நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். நிஷாந்த் இசக்கிப்பாண்டியனிடம் வசித்து வருகிறார்.
இதற்கிடையில் மீனா, நாங்குநேரி அருகில் உள்ள பட்டப்பிள்ளை புதூரை சேர்ந்த முத்து என்பவரை 10 மாதங்களுக்கு முன்பு 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் பாளையங்கோட்டையில் தனி வீடு எடுத்து குடியிருந்து வருகின்றனர். மேலும் இரண்டாவது கணவருடன் அவர் சுதந்திரமாக சுற்றுலா சென்று அதனை சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளார்.
முதல் திருமணம் செய்து குழந்தையை கணவரிடம் விட்டு விட்டு மீனா இரண்டாவது கணவருடன் சுற்றுவது தந்தை சுடலைமுத்துவிற்கு பிடிக்கவில்லை.
இந்த நிலையில் தாதன்குளத்தில் கோவில் திருவிழாவிற்காக மீனா தனது சித்தி பார்வதி வீட்டிற்கு வந்து தங்கி இருந்தார். இந்த தகவல் சுடலைமுத்துவிற்கு தெரிந்த்தது, உடனே சுடலைமுத்து, தனது இரண்டாவது மனைவி முப்பிடாதி, மகன் மாயாண்டி, சுடலைமுத்துவின் அண்ணன் மனைவி வீரம்மாள், அவரது மகன் முருகன் ஆகியோருடன் மீனா தங்கி இருந்த வீட்டுக்கு சென்றார்.
அங்கு மீனாவிடம் இரண்டாவது திருமணம் குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த தந்தை சுடலைமுத்து கையில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மீனாவின் கழுத்து மற்றும் தலையில் சரமாரியாக வெட்டினார்.
இதில் ரத்த வெள்ளத்தில் மீனா அங்கேயே சரிந்து விழுந்து உயிரிழந்தார். இதற்கிடையில் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு வந்தனர். இதற்குள் சுடலைமுத்து உள்பட அனைவரும் அங்கிருந்து தப்பி ஓடினர்.
இதுகுறித்து மீனாவின் சித்தி பார்வதி செய்துங்கநல்லூர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். இந்த சம்பவம் தொடர்பாக சுடலைமுத்து, மாயாண்டி, முப்பிடாதி, வீரம்மாள் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய முருகனை போலீசார் தேடி வருகின்றனர். இதற்கிடையே மீனா உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.