கொடைக்கானல் அருகே, சுற்றுலா பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து
![கொடைக்கானல் அருகே, சுற்றுலா பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து](https://tn96news.com/wp-content/uploads/2022/08/2794bc5e-754b-46a7-aef9-df6c83713ec7-850x560.jpg)
குஜராத் மாநிலத்தில் இருந்து 40-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கர்நாடக மாநிலம் வழியாக சுற்றுலா பஸ் மூலம் கொடைக்கானல் வந்தனர். அங்கு பல்வேறு சுற்றுலா தளங்களை சுற்றிப் பார்த்துவிட்டு இன்று காலை அதே பஸ்சில் சொந்த ஊருக்கு புறப்பட்டனர்.
கொடைகானல் மலைப்பாதையில் டம்டம் பாறை அருகே சென்று கொண்டிருந்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அந்த பள்ளத்தில் அதிக அளவில் மரங்கள் வளர்ந்து காணப்படுவதால், பஸ் பள்ளத்தில் அடிப்பகுதிக்கு செல்லாமல் மரங்களுக்கு இடையில் சிக்கி அந்தரத்தில் தொங்கியது. இதனால் பஸ்சில் இருந்தவர்கள் பயத்தில் கூச்சல் போட்டனர்.
இதையடுத்து அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் கூடினர். அவர்கள் பஸ்சின் பின்பக்க கண்ணாடியை உடைத்து அதில் சிக்கியிருந்தவர்களை கவனமாக மீட்டனர்.
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. காயமடைந்த சிலர் மட்டும் வத்தலகுண்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து அறிந்ததும் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் விபத்தில் சிக்கிய பஸ்சை கிரேன் மூலம் மேலே தூக்க நடவடிக்கை மேற்கொண்டனர், மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)