248 கிராமங்களின் கூட்டு குடிநீர் திட்டத்தின் தற்போதைய நிலை என்ன? நகராட்சி நிர்வாக அதிகாரி விளக்கம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, கயத்தார்,ஓட்டபிடாரம், விளாத்திகுளம், புதூர் ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 248 கிராமங்களின் கூட்டு குடிநீர் திட்டத்தின் தற்போதைய நிலை மற்றும் கயத்தார் வட்டம் ராஜாபுதுக்குடி கிராமத்திற்கு குடிநீர் வழங்குமாறு சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு கோரிக்கை விடுத்து இருந்தார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ.வுக்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை துணை செயலாளர் மீனாட்சி அனுப்பி இருக்கும் கடிதத்தில் கூறி இருப்பதாவது:
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி, கயத்தார், ஓட்டபிடாரம், விளாத்திகுளம், புதூர் ஊராட்சி ஒன்றியங்களை சார்ந்த ஆற்றுக்குடிநீர் இல்லாத 248 குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டத்தின் பணிகள் முடிக்கப்பட்டு விட்டன.
தற்போது சோதனை ஓட்டம் மூலம் ஓட்டப்பிடாரம் ஒன்றியத்தில் உள்ள 32 ஊரக குடியிருப்புகளுக்கும், கயத்தார் ஒன்றியத்தில் 56 குடியிருப்புகளுக்கும், கோவில்பட்டி ஒன்றியத்தில் 42 குடியிருப்புகளுக்கும், விளாத்திகுளம் ஒன்றியத்தில் 40 குடியிருப்புகளுக்கும், புதூர் ஒன்றியத்தில் 40 குடியிருப்புகளுக்கும் ஆக மொத்தம் 21௦ ஊரக குடியிருப்புகளுக்கு ஆற்றுகுடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
மீதமுள்ள 38 ஊரக குடியிருப்புகளுக்கு தாமிரபரணி ஆற்று குடிநீர் வழங்க துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.