பண மோசடி: தனக்கு திருமணம் நிச்சயம் செய்தவரை கைது செய்த பெண் போலீஸ் அதிகாரி
அசாம் மாநிலம், நாகோன் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜுன்மோனி ரபா, இவர் உதவி இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். அவரது பெற்றோர் ஜுன்மோனி ரபாவிற்கு திருமணத்திற்காக வரன் தேடினர். திருமணம் வரம் பார்க்கும் இணையதளத்தில் பதிவு செய்து இருந்தனர்.
இதை பார்த்து ராணா போகட் என்பவர் இணையதளம் வழியாக ஜுன்மோனிக்கு அறிமுகமானார். தான் அரசு அலுவலகத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருப்பதாக கூறினார். இதை நம்பிய ஜுன்மோனி, ராணா போகட்டுடன் பேசி பழகிவந்தார்.
இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இவர்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடதது. வரும் நவம்பர் மாதத்தில் திருமணம் நடைபெற இருந்தது. நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த உடன் வருங்கால கணவருடன் உதவி இன்ஸ்பெக்டர் தொலைபேசி வாயிலாக பேசி வந்தார்.
இந்நிலையில் ஜுன்மோனிக்கு அறிமுகம் இல்லாத ஒரு நபர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நீங்கள் திருமணம் செய்துகொள்ள இருக்கும் நபர் சரியானவர் இல்லை நீங்கள் விசாரித்துப் பாருங்கள் அவருடைய உண்மை முகம் தெரியும் என கூறியுள்ளார்.
இதை தொடர்ந்து ஜுன்மோனி ராணாவிடம் விசாரித்தார். ஆனால் அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால் அவரின் சந்தேகம் மேலும் அதிகரித்தது. இதையடுத்து அவருக்கு தெரியாமலேயே ராணா குறித்து ரகசியமாக விசாரணை நடத்தினார். அப்போது ஓ.என்.ஜி.சி அரசு நிறுவனத்தின் உயர் அதிகாரி என்று சொல்லி , பலரிடம் வேலை வாங்கி தருவதாக கோடிக்கணக்கில் பண மோசடி செய்தது தெரியவந்தது.
மேலும் மேகாலயா, மிசோரம் உள்ளிட்ட மாநிலங்களிலும் ராணா மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. இதற்கான முழு ஆதாரங்களைத் திரட்டி ஜுன்மோனி தனக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டவர் என்றும் பாராமல் ராணா போகட்டை அதிரடியாக கைது செய்துள்ளார். பணமோசடியில் ஈடுபட்டவர் வருங்கால கணவர் என்றும் பாராமல் கைது செய்த உதவி இன்ஸ்பெக்டர் ஜுன்மோனி ரபாவுக்கு போலீஸ் உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்