ஸ்டெர்லைட் ஆலை வழக்கு: மாசு கட்டுப்பாடு வாரியத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவு
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள பகுதிகளில் எந்த அளவுக்கு மாசு ஏற்பட்டுள்ளது என்பதை வகைப்படுத்த வேண்டும் எனு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டதைத் தொடர்ந்து, ஆலை மூடப்பட்டது. இந்நிலையில் ஆலை வளாகத்தில் அபாயகரமான கழிவுகள் தேங்கி நிலம் பாதிக்கப்பட்டுள்ளதால், ஆலையை இடிக்க அரசுக்கு உத்தரவிடக் கோரி சமூக ஆர்வலர் பாத்திமா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா, நீதிபதி சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில், ஆலையை மூட உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்த மேல்முறையீடு வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், ஆலையின் சுற்றுப்புற நிலத்தில் உள்ள மாசுவை அகற்றுவதற்கான திட்டத்தை வகுக்க தனியார் நிறுவனத்தை நியமிக்க உள்ளதாக கூறி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், மாசு அகற்றும் விசயத்தில் நிபுணத்துவம் பெற்ற மாசு கட்டுப்பாட்டு வாரியம், அப்பணிக்கு தனியாரை நியமிக்க முடிவெடுத்தது ஏன் என கேள்வி எழுப்பினர்.
பின்னர், ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள பகுதிகளில் எந்த அளவுக்கு மாசு ஏற்பட்டுள்ளது என்பதை வகைப்படுத்த வேண்டும். மாசுவை அகற்றுவதற்கான திட்டத்தை விரைந்து வகுக்க வேண்டும் என மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தை எதிர்மனுதாரராக சேர்த்து, விசாரணையை ஏப்ரல் 24-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்