ராக்கெட் ஏவுதளம் விளம்பரத்தில் சீன கொடி சர்ச்சை: தவறு நடந்து விட்டதாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விளக்கம்
தூத்துக்குடி, துறைமுகத்தில் நேற்று பிரதமர் மோடி பங்கேற்ற விழாவின் போது குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதள திட்டம் அடிக்கல் நாட்டப்பட்டது. இதையொட்டி அன்றைய தினம் வெளியான காலை பத்திரிகையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சார்பில் கொடுத்த விளம்பரம் சர்ச்சையை கிளப்பியது.
அதில் ராக்கெட் ஏவுவது போல் ஒரு படம் இருக்கிறது. அதில் சிவப்பு நிறத்தில் ஸ்டார் குறியீடுகளுடன் ராக்கெட் இடம்பெற்றுள்ளது. இது சீன நாட்டு கொடியை போன்றே இருப்பதால் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. பிரதமர் மோடியும் இது பற்றி விமர்சித்து இருந்தார்.
இந்த நிலையில், தூத்துக்குடி மீன்பிடித்துறைமுக வளாகத்தில், இன்று காலை நடைபெற்ற மீன்பிடிப் படகு என்ஜின் பராமரிப்பு மற்றும் கடலில் மீனவர்களின் பாதுகாப்பு குறித்து மீனவர்களுக்கான ஒருவார கால இலவச பயிற்சி தொடக்க விழாவில் பங்கேற்ற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் ‘விளம்பரம் சர்ச்சை’ குறித்த கேள்வியை நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு பதிலளித்த அனிதா ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-
எங்கள் தரப்பில் கொடுக்கப்பட்ட நாளிதழ் விளம்பரத்தில் சீன அடையாள கொடியுடன் அச்சிடப்பட்டு சிறு தவறு நடந்துவிட்டது. அது, தெரியாமல் நடந்த தவறு. அதில் எந்த உள்நோக்கமும் இல்லை. நான் இந்தியன்தான்.
எங்களுக்கு இந்தியாவின் மீது அதிகப் பற்று இருக்கிறது” குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க வேண்டும் என முதன்முதலில் குரல் கொடுத்தது கலைஞர் கருணாநிதியும், அப்போதைய பிரதமராக இருந்த மன்மோகன்சிங்கும்தான். அதன்பிறகு தமிழக முதல்வர் ஸ்டாலினும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழியும் அழுத்தமாக குரல் கொடுத்தனர். இதை யாரும் மறுக்க முடியாது.
ஒரு அரசு விழாவில் மத்திய அரசு கொண்டு வந்த திட்டத்தையும் பயனையும், புதிய திட்டங்களையும், தொடங்க இருக்கும் திட்டங்களையும் பற்றி பேசுவார்களே தவிர அரசியல் பேச மாட்டார்கள். ஆனால் பிரதமர் , நேற்று தூத்துக்குடியில் நடைபெற்ற விழாவில் அப்படி அரசியல் பேசியது நமது நாட்டின் பிரதமர் என்பதை என நினைக்கும் போது வெட்கமாக இருக்கிறது அடிப்படைகூட தெரியாமல் இருக்கிறார் பிரதமர்.
இவ்வாறு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார்.