பள்ளி தேர்வு முறை குறித்து ஆலோசனை: கோவில்பட்டி பள்ளி ஆசிரியைக்கு பிரதமர் மோடி பாராட்டு கடிதம்
பள்ளி தேர்வு முறை குறித்து ஆலோசனை வழங்கியதற்காக கோவில்பட்டி சுபா நகரில் உள்ள எடுஸ்டார் சி.பி.எஸ்.இ. பள்ளி ஆசிரியை யசோதாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு கடிதம் அனுப்பியுள்ளர்.
இது தொடர்பாக பிரதமர் மோடி அனுப்பியுள்ள கடிதம் தமிழில் உள்ளது. அவர் கூறி இருப்பதாவது:-
திருமதி யசோதா அவர்களே,
`பரிக்சா பே சர்ச்சா’’ வின் ஒரு பகுதியாக உங்கள் கருத்துக்களையும், உங்களுடன் பணிபுரிபவர்களின் கருத்துக்களையும், அறிந்து கொள்வதில் மகிழ்ச்சி. இதற்காக உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டின் வளர்ச்சி மற்றும் மாணவர்களின் வளர்ச்சி குறித்த உங்கள் கருத்துக்கள் மிகவும் முக்கியமானவை.
ஒரு மாணவனின் வாழ்க்கையில் வழிகாட்டியாக, கனவுகள் காணக் கற்றுக்கொடுத்து, அந்தக் கனவுகளைக் குறிக்கோள்களாக மாற்றி, அவற்றை நிறைவேற்ற வைக்கும் ஆற்றல் மிக்கவர்கள் ஆசிரியர்கள். மாணவர்களிடையே நேர்மறை உணர்வையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தி வாழ்நாள் முழுவதும் ஆசிரியர்கள் வழிகாட்டுகிறார்கள்.
மாறிவரும் இன்றைய காலத்திற்கு ஏற்ப, விளையாட்டு,தொழில்நுட்பம், புதிய கண்டுபிடிப்புகள், ஸ்டார்ட்அப்கள் உள்ளிட்ட பல வாய்ப்புகள் இளைஞர்களுக்கு உள்ளன. மாணவர்களின் கனவுகளை நனவாக்க ஊக்குவிப்பதிலும், அவர்களின் திறன்களை சிறப்பாகப் பயன்படுத்துவதிலும், இந்தியாவின் வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்துவதிலும் ஆசிரியர்களின் விலைமதிப்பற்ற வழிகாட்டுதல் தீர்க்கமானதாக இருக்கும்.
2047ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், அதாவது நமது அமிர்த காலத்தில், நமது திறமைபெற்ற இளைஞர்கள் ஒரு புகழ்பெற்ற மற்றும் வளர்ந்த இந்தியாவை உருவாக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். அடுத்த 25 ஆண்டுகளில், நமது ஆசிரியர்கள், இளைஞர்களின் இலக்குகளை நாட்டின் முன்னேற்றத்துடன் இணைக்க ஊக்குவிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.
உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கு மீண்டும் ஒரு முறை நன்றி. உங்கள் நல்ல ஆரோக்கியத்திற்கும் ஒளிமயமான எதிர்காலத்திற்கும் வாழ்த்துக்கள்.
இவ்வாறு கடிதத்தில் மோடி குறிப்பிட்டுள்ளார்.
1 Comment
Sure