மின்கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு: தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு
தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஆணையர் சாருஸ்ரீ, துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. கூட்டத்தில் மண்டல தலைவர்கள் அன்னலட்சுமி கோட்டுராஜா, நிர்மல்ராஜ், பாலகுருசாமி மற்றம் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டம் தொடங்கியதும் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெற்றி செல்வன், மந்திர மூர்த்தி, ஜெயலட்சுமி, பத்மாவதி ஜெயராணி ஆகிய 5பேரும் எழுந்து “ஏழை எளிய மக்களை பாதிக்கும் வகையில் மின்சார கட்டணத்தை உயர்த்திய தமிழக அரசுக் கண்டித்து மாமன்ற கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்கிறோம்” என்று கோஷம் எழுப்பியபடி அவையை விட்டு வெளியேறினர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. உறுப்பினர்கள் “வெளியே போ வெளியே போ” என்று என்று கூச்சலிட்டனர். இதனால் அவையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
பின்னர் பேசிய மேயர் ஜெகன் பெரியசாமி, “தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் நல்லாட்சி நடந்து வருகிறது. இதற்கு களங்கம் ஏற்படும் வகையில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் செயல்படுகிறார்கள். இதை வன்மையாக மாமன்றம் கண்டிக்கிறது. அவர்களுக்கு மக்கள் பிரச்சினையில் அக்கறை இல்லை. இது வேதனை அளிக்கிறது என்று கூறினார்.
இதைத் தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.