• May 18, 2024

விளம்பரத்துக்காக பட்ஜெட் தாக்கல் செய்தால் விவசாய உற்பத்தி பெருகாது; விவசாய சங்கங்களின் தலைவர் குற்றச்சாட்டு

 விளம்பரத்துக்காக பட்ஜெட் தாக்கல் செய்தால் விவசாய உற்பத்தி பெருகாது; விவசாய சங்கங்களின்  தலைவர் குற்றச்சாட்டு

தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு மாநில தலைவர் பி.ஆர்.பாண்டியன் பேட்டி .

தமிழக அனைத்து விவசாய சங்கம் சார்பில் விவசாயிகள் பிரச்சினை குறித்து ஆலோசனை கூட்டம் கோவில்பட்டியில் நடைபெற்றது.
தமிழக அனைத்து விவசாய சங்க தூத்துக்குடி மாவட்ட செயலாளர் அருமைராஜ் தலைமை தாங்கினார். தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு மாநில தலைவர் பி.ஆர்.பாண்டியன் சிறப்புரையாற்றினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட தலைவர் கோபாலகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர்கள் விஜயகுமார், அய்யப்பராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டம் முடிந்ததும் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு மாநில தலைவர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியாவது:-
தென்மேற்கு பருவ மழை பெய்தும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகள் நிரம்பவில்லை. எனவே, இந்த மாவட்டங்களை அரசு சிறப்பு கவனம் செலுத்தி, நீர்நிலைகளை தூர்வாரி நீர் கொள்ளளவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாய விளை பொருட்களை மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றம் செய்து, அதனை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தூத்துக்குடியை மையமாக கொண்டு மத்திய அரசு ஏற்றுமதி முனையத்தை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கான பல மறைமுக சதி நடைபெறுவதாக வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. அதனை நிரந்தரமாக கடந்த ஆட்சி மூடியிருக்கிறது. அது தொடர்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்
இலவசம் என்ற பெயரில் விவசாயிகளுக்கான நலத்திட்டங்களை நிறுத்துவது என்பது மிகப்பெரிய துரோக செயல். இது தொழில் அல்ல. மக்களுக்கு உணவு கொடுப்பதற்கான சேவை. இதனை இலவசம் என கூறுவது பிற்போக்கு தனமானது.
கேரளாவுக்கும் – தமிழ்நாட்டுக்கு முல்லை பெரியாறு தவிர்த்து மற்ற நதிநீர் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்தவும், புதிய நீர்ப்பாசன திட்டங்களை செயல்படுத்தவும் முதல்வர் தலைமையிலான உயர் அதிகாரிகள் கொண்டு குழு தி.மு.க. அரசு வந்தபின்னர் செயல்படவே இல்லை. இதனால் பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.


கேரளாவில் நதியில் இருந்து வெளியேறும் நீர் அரபிக் கடலில் கலக்கிறது. ஆனால், தமிழ்நாட்டை நோக்கி வரும் ஆறுகளை இணைக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழ்நாட்டில் பாயும் நதிகளை இணைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தாமிரபரணியின் தண்ணீரைக்கொண்டு போய் கடலில் விடுகிறோம். அந்த தண்ணீர் செல்லும் பாதையில் உள்ள குளங்களை நிரப்ப எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதே நிலைதான் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் இருப்பதாக ஆதாரத்துடன் தெரிவித்துள்ளனர். இந்த 3 மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகள் வறண்டு கிடக்கிறது. அணைகளில் நிரம்ப கூடிய நீர் கடலுக்கு செல்கிறது. இதைவிட வெட்கக்கேடு வேறெங்கும் உண்டா?
விவசாயத்துக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்ததை வரவேற்கிறோம். எழுத்துப்பூர்வமாக காகிதத்தில் தாக்கல் செய்ததால் மட்டும் விவசாயம் வளர்ந்துவிடாது. இதற்கு முன்னதாகவே அவர்கள் தேர்தல் அறிக்கையில், நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2500-ம், கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4500 விலை தருவதாக அறிவித்து 2 ஆண்டுகள் முடியப்போகிறது.
இதுவரை வாய் திறக்க மறுக்கின்றனர். பட்ஜெட் தாக்கல் செய்ததால் விவசாய உற்பத்தி பெருகவில்லை. விவசாயியின் உழைப்பு, இயற்கை தந்த வரத்தால் உரிய தண்ணீர் கிடைத்து நாங்கள் உற்பத்தியை பெருக்கி உள்ளோம். ஆனால், உற்பத்தி செய்யக்கூடிய விவசாயியின் வறுமை தொடர்கிறது.
வேளாண் துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்தது யானை பசிக்கு சோளப்பொறியை போன்றது. அந்த நிதியை வைத்து வேளாண்மை உற்பத்தியை பெருக்க முடியாது. எந்த நோக்கத்துக்காக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதோ அதன் அடிப்படையே நிதி ஆதாரங்கள் தான். அதனை ஒதுக்கீடு செய்யாமல் விளம்பரத்துக்காக பட்ஜெட் தாக்கல் செய்தால் விவசாய உற்பத்தி பெருகாது.
ஒரு மூட்டை யூரியா ரூ.270. அதற்கு இணையாக ரூ.750 கொடுத்து இடுபொருட்களை வாங்கினால் தான் உரக்கடைகளில் ஒரு மூட்டை யூரியா வாங்க முடியும். அப்படியென்றால் ஒரு மூட்டை யூரியா ரூ.1000-க்கு மேல் கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். உற்பத்தி நிறுவனங்கள் நேரடியாக விவசாயிகளை கொடுமைப்படுத்துகின்றன. இதை தட்டிக்கேட்க தமிழக அரசு தயங்குகிறது.
தூத்துக்குடியில் உள்ள உர உற்பத்தி நிலைய உரிமையாளர்கள் தான் இந்த மிகப்பெரிய கொடுமையை தமிழகத்தில் அரங்கேற்றி வருகின்றனர்.
குடிமராமத்து திட்டம் மிகப்பெரிய ஒரு பலன் அளித்தது. இந்த திட்டத்தை தி.மு.க. அரசு கைவிட்டுள்ளது. இதன் காரணத்தால் தான், கிடைக்கும் தண்ணீரை சேமிக்க முடியாமல் போனது. இதன் அடிப்படை நோக்கம் வண்டல் மண் வரை விலைக்கு விற்பனை செய்ய வேண்டும் என்ற கொள்கையோடு குடிமராமத்து திட்டத்தை தமிழக அரசு கைவிட்டுள்ளதாக விவசாயிகள் அஞ்சுகின்றனர். தமிழக முதல்வர் இதுகுறித்து விளக்க அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *