தமிழகத்தில் ‘ஷவர்மா’ வுக்கு தடை விதிப்பது பற்றி ஆலோசனை; அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
கேரள மாநிலத்தில் ‘ஷவர்மா’ சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ள ஷவர்மா விற்பனை கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகிறார்கள். கோவில்பட்டியில் 2 கடைகளில் கெட்டுபோன 1௦ கிலோ சிக்கன் கைப்பற்றி அளிக்கப்பட்டது.
இந்நிலையில் ‘ஷவர்மா’ விவகாரம் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
மேலைநாட்டு உணவு வகையான ‘ஷவர்மா’ அந்த நாட்டின் மக்களின் தட்பவெப்ப நிலைக்கு பொருந்தும்; பொதுமக்கள் ‘ஷவர்மா’ போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும்.
தமிழகத்தில் ‘ஷவர்மா’ கடைகளுக்கு தீவிர சோதனை நடத்தப்பட்டு, இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளுக்கு அறிவுரை வழங்கி, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கேரளாவை போன்று தமிழகத்திலும் ‘ஷவர்மா’வுக்கு தடை விதிப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.