பாம்பன் பாலத்தில் விபத்து: கார் மோதியதில் மோட்டார் சைக்கிளில் வந்தவர் கடலுக்குள் விழுந்தார்
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து காரைக்குடி நோக்கி ஒரு கார் சென்று கொண்டிருந்தது. அப்போது மண்டபத்தில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி ஒருவர் மோட்டார் சைக்கிளிலில் சென்றார். பாம்பன் பாலத்தில் சென்ற மோட்டார் சைக்கிள் மீது கார் நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் கார் மற்றும்மோட்டார் சைக்கிள் பாலத்தின் நடைபாதை மீது ஏறி மின்கம்பத்தில் மோதி நின்றது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்தவர் தூக்கி வீசப்பட்டு கடலில் விழுந்தார். இந்த விபத்தை பார்த்த அந்த பகுதியினர் ஓடிவந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர், கடலில் விழுந்தவரை அங்கிருந்த மீனவர்கள் காப்பாற்றினார்கள். தண்ணீரில் தத்தளித்தவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
விபத்து குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.