மாணவ, மாணவிகள் பாதபூஜை; பெற்றோர்கள் ஆனந்த கண்ணீர்
கோவில்பட்டி கதிரேசன் கோவில் மலை அருகே உள்ள யு.பி மெட்ரிகுலேஷன் பள்ளியில் படிக்கும் மாணவர்கள், தங்கள் பெற்றோர்கள் மீது வைத்திருக்கும் பாசம், மரியாதையை வெளிப்படுத்தும் வகையிலும் அரசு பொது தேர்வை சந்திக்கும் நிலையில் பெற்றோர்களுக்கு பாதபூஜை செய்யும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
பெற்றோர்கள் நாற்காலிகளில் வரிசையாக அமர்ந்து இருந்தனர்.
அவர்களின் பிள்ளைகளான மாணவ- மாணவிகள் தங்களது பெற்றோர்களின் கால்களை பன்னீரால் சுத்தப்படுத்தி, பூக்கள் தூவி பூஜை செய்தும், ஆரத்தி எடுத்தும் மரியாதை செய்தனர்.
இந்த காட்சியை கண்டு ஆனந்த கண்ணீர் வடித்த பெற்றோர்கள், தங்களது குழந்தைகளை அரவணைத்து இனிப்பு வழங்கினர். இந்த காட்சி அனைவரையும் நெகிழசெய்தது.
இந்த நிகழ்ச்சி நடந்தபோது தந்தை – குழந்தை, தாய் – குழந்தைகள் பாசத்தினை வெளிப்படுத்தும் திரைப்பாடல்கள் இசைக்கப்பட்டன.
தங்கள் குழந்தைகள் பாத பூஜை செய்ததது அவர்கள் தங்கள் மீது வைத்துள்ள பாசப்பிணைப்பினை வெளிப்படுத்தியது மட்டுமின்றி, தங்களுக்கு கண்ணீரை வரவைத்து விட்டதாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெற்றோர்கள் தெரிவித்தனர்
தங்கள் மீது தங்கள் பெற்றோர் வைத்திருக்கும் பாசம், நம்பிக்கையை கண்கூடாக பார்த்து மகிழ்ச்சி அடைந்ததாக மாணவர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
பாத பூஜை நிகழ்ச்சிக்கு பள்ளி நிறுவனர் பரமசிவம் தலைமை வகித்தார். முதல்வர் அமுதவள்ளி வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினர்களாக கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி முதல்வர் ஜான் கணேஷ், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஹரி கண்ணன், வழக்கறிஞர் ஜெயஸ்ரீ ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.