எரியும் நெருப்பு வளையத்திற்குள் கண்களை மறைத்தபடி சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்த கோவில்பட்டி மாணவர்கள்
கோவில்பட்டியில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பம் சுற்றும் உலக சாதனை முயற்சி நடத்தபட்டது.
அதுவும் வெறும் சிலம்பம் அல்ல. கண்களை கருப்பு துணியால் சுற்றி மறைத்தபடி சிலம்பம் ஆடவேண்டும். பல நாட்கள் பயிற்சிக்கு பிறகு இந்த சாதனை முயற்சியில் கோவில்பட்டி சரவணாஸ் ஆர்ட்ஸ் ப்யூஷன் மாணவர் குணமயில், கிருஷ் அபிநவ், பிரணவ் கணேஷ், சிவ அக்சயா, ஷமந்த் ராஜ், சிபி சக்கரவர்த்தி, மீனாட்சி ஆகியோர் பங்கேற்றனர். இந்த சாதனை நிகழ்ச்சி காந்தி மைதானத்தில் நடைபெற்றது
.நாடார் உறவின் முறைச் சங்கத் தலைவர் ஏ.பி.கே.பழனிச்செல்வம் தலைமை வகித்தார். ரோட்டரி மாவட்டத் தலைவர் விநாயகா ஜி.ரமேஷ், தொழிலதிபர்கள் ரவிமாணிக்கம், எம்.எஸ்.எஸ்.வி.பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, நெருப்பு வளையத்திற்குள் நெருப்பு வளையத்தை வைத்து பல்வேறு நிலைகளில் சிலம்பம் சுற்றும் உலக சாதனை முயற்சி நிகழ்ச்சியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் பங்கேற்ற மாணவர்கள் 42 மீட்டர் ஆரத்தில் நெருப்பை சுற்றிலும் வைத்து 2 மீட்டர் இடைவெளியில் உழைப்பாளர் தின லோகோவில் நின்றபடி கண்களை கருப்பு துணியால் கட்டிகொண்டு ஒரு மீட்டர் உயர நெருப்பு வளையத்தை கையில் பிடித்து சுற்றி சிலம்பம் ஆடினார்கள்.
மேலும் இரு சிலம்பம் கம்புகளில் நெருப்பு வைத்து சுற்றுதல், நெருப்பு வளையத்தை வைத்து சிலம்பம் சுற்றுதல் உள்பட 20 வகைகளில் 15 நிமிடம் 55 நொடிகள் சிலம்பம் சுற்றி உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்த காட்சியை பார்வையாளர்கள் கைதட்டி ஆரவாரம் செய்து ரசித்தனர்,
தொடர்ந்து உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டவர்களுக்கும், பயிற்சியாளர்களான நல்லதம்பி, ஜெகதீச சக்கரவர்த்தி ஆகியோருக்கு கடம்பூர் செ.ராஜு பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினார்.
இதற்கான ஏற்பாடுகளை சரவணாஸ் ஆர்ட்ஸ் ப்யூஷன் நிறுவனர் பாலசுப்பிரமணியன் செய்திருந்தார்.