கந்து வட்டி கொடுமை: தற்கொலை செய்தவரின் மனைவி, அமைச்சர் காலில் விழுந்து கதறல்; உரிய நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு உத்தரவு
கோவில்பட்டி வீரவாஞ்சி நகரைச் சேர்ந்த ஆறுமுக பாண்டி என்பவர் , கந்து வட்டிக்கு பணம் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது.
பணத்தை திருப்பி கேட்டு கந்து வட்டி கும்பலை சேர்ந்தவர்கள் வீட்டு பத்திரம், நகைகள், செக் ஆகியவற்றை பறித்து சென்றதாக தெரிகிறது.
கந்து வட்டி கொடுமையில் சிக்கிய ஆறுமுக பாண்டி அளித்த புகாரின் பேரில் போலீசார் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் ஆறுமுக பாண்டி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதனால் நேற்று ஆறுமுக பாண்டி குடும்பத்தினர், போலீஸ் நடவடிக்கை கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று காலை அமைச்சர் கீதா ஜீவன் கோவில்பட்டி சத்தியபாமா கல்யாண மண்டபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அங்கு ஆறுமுக பாண்டி மனைவி மற்றும் குடும்பத்தினர் சென்று அமைச்சர் வரும்போது சந்தித்தனர். அமைச்சர் கீதாஜீவன் காலில் விழுந்து ஆறுமுக பாண்டி மனைவி கதறி அழுதார்.
தனது கணவர் சாவுக்கு காரணமான கந்துவட்டி கும்பலை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். உடனே அமைச்சர் கீதாஜீவன் அருகில் இருந்த மாவட்ட மாவட்ட கலெக்டர் லட்சுமிபதியிடம் கூறி விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
அதைத்தொடர்ந்து ஆறுமுக பாண்டி மனைவியை போலீசார் அங்கிருந்து அழைத்துச் சென்றனர்