விஜயகாந்த் மரணம்; தொண்டர்கள் கண்ணீர்- மு.க.ஸ்டாலின் அஞ்சலி
.
கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த தே.மு.தி.க.நிறுவனர் விஜயகாந்த் அவ்வப்போது கட்சி அலுவலகம் வந்து தொண்டர்களை சந்தித்து வந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் 18ம் தேதி சென்னை சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டார்.
முதலில் அவர் வழக்கமான பரிசோதனைக்கு சென்றுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அவருக்கு சளி, இருமல் காரணமாக அவருக்கு சுவாசிப்பதில் பிரச்சனை இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனையில் 2 வாரங்களுக்கு மேலாக சிகிச்சை பெற்ற விஜயகாந்த் குணம் அடைந்து கடந்த 11ம் தேதி வீடு திரும்பினார். இதனையடுத்து கட்சியின் பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் பங்கேற்றார் விஜயகாந்த். இந்த கூட்டத்தில் கட்சியின் பொதுசெயலாளராக விஜயகாந்த் மனைவி பிரேமலதா தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை இரவு விஜயகாந்த் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஓரிரு நாட்களில் வீடு திரும்பு வார் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
மேலும் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் வெண்டிலேட்ட்டர் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த தகவலை தே.மு.தி.க. தெரிவித்தது. இந்த அறிக்கை இன்று காலை 6 ,மணிக்கு வெளியானது. சிறிது நேரத்தில் காலை 6.10 மணிக்கு விஜயகாந்த் உயிர் பிரிந்தது. இந்த நிலையில் இன்று காலை விஜயகாந்த் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 71. அருகில் இருந்த அவரது மனைவி பிரேமலதா மற்றும் மகன்கள் கதறி அழுதனர்.
விஜயகாந்த் மரணம் அடைந்தார் என்ற செய்தி காலை 8.50 மணிக்கு அறிவிக்கப்பட்டது. மருத்துவமனை சார்பில் வெளியிட்ட அறிக்கையில். “‘கேப்டன் விஜயகாந்த் நுரையீரல் சுழற்சி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வெண்டிலேட்டர் ஆதரவுடன் சிகிச்சை பெற்றிருந்தார். மருத்துவ பணியாளர்களின் கடின முயற்சி இருந்தபோதிலும் அவர் இன்று காலை காலமானார்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
விஜயகாந்த் மரணத்தை தொடர்ந்து அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.கண்ணாடி பேழையில் அவரது உடல் வைக்கப்பட்டது. விஜய்காந்த் உடலுக்கு வேட்டி-சட்டை கருப்பு கண்ணாடி அணிவித்து தே.மு.தி.க.கட்சி கொடி போர்த்தப்பட்டு இருந்தது.
முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பிரேமலதா மற்றும் மகன்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் என்ன உதவி வேண்டுமானாலும் கேளுங்கள் செய்து தருகிறேன் என்று கூறினார்.
விஜயகாந்த் மறைவு செய்தி அறிந்த கட்சி தொண்டர்கள், ரசிகர்கள் கதறி அழுதவண்ணம் வீட்டில் குவிந்தனர். விஜய்காந்த் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். திரை உலகினர் பலரும் வந்து அஞ்சலி செலுத்தினர்.
சிறிது நேரத்துக்கு பிறகு பின்னர் விஜயகாந்த் உடல் வேனில் ஏற்றப்பட்டு கோயம்பேடு தே.மு.தி.க.கட்சி அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. வேனை தொடர்ந்து தொண்டர்கள் நடந்து சென்றனர். வழி நெடுக மக்கள் திரண்டு வந்து விஜய்காந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த முயன்றதால் வேன் நகர்ந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டது. போலீசார் தலையிட்டு வழி ஏற்படுத்தி கொடுத்தனர்.
தே.மு.தி.க. கட்சி அலுவலகத்துக்கு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள், கட்சி தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் திரண்டு வந்து விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். கட்சி அலுவலக பகுதி முழுவதும் அழுகை குரல் கேட்டபடி இருந்தது.
.விஜயகாந்த் மரணம் தொடர்பாக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ குடும்ப நண்பராக என்னிடம் பழகியவர். கலைஞர் மீது என்றென்றும் தனிப்பாசம் கொண்டவர். நண்பர் விஜயகாந்த் உடல்நலம் குன்றி இருந்தபோது இரண்டு முறை நேரில் சந்தித்து நலம் பெற விரும்பினேன். ஆனால் இயற்கை இரக்கமின்றி நண்பரின் வாழ்க்கையை எடுத்து கொண்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.