விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவு காரணமாக வீட்டில் இருந்தபடியே சிகிச்சை எடுத்து வருகிறார். அவ்வப்போது வெளிநாடு சென்றும் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டு வருகிறார்.
இதன் காரணமாக பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை குறைத்துக்கொண்டுவிட்டார். தே.மு.தி.க. கட்சிக் கூட்டங்களில் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்று வருகிறார்.
இந்நிலையில் கடந்த 18ம் தேதி மார்புச் சளி, இடைவிடாத இருமல் காரணமாக விஜயகாந்த், சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், விஜயகாந்த் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக, அவருக்கு சிகிச்சை அளித்து வரும் தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. விஜயகாந்த்துக்கு செயற்கை சுவாச சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், செயற்கை சுவாசக் கருவி அகற்றப்பட்டு, அவர் இயற்கையாக சுவாசிப்பதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், விஜயகாந்த் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் ஓரிரு நாட்களில் விஜயகாந்த் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்தது.
இந்த நிலையில் விஜயகாந்த் உடல்நிலை யில் நல்ல முன்னேறற்றம் காணப்பட்டது. எனினும் கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லை என்று மருத்துவமனை நிர்வாகம் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
விஜயகாந்துக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது , அவர் விரைவில் பூரண நலம் பெறுவார் என்று நம்புகிறோம். இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதுநாள் வரை விஜய்காந்த் உடல்நிலை சீராக இருப்பதாகவும், சில நாட்களில் வீடு திரும்புவார் என்று கூறப்பட்ட நிலையில் இன்று இவ்வாறு தெரிவித்து இருப்பது தே.மு.தி.க.தொண்டர்களுக்கும்,ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.