மதுக்கடை பார் ஊழியர் வெட்டிக்கொலை; கோவில்பட்டியில் பரபரப்பு
கோவில்பட்டி கிருஷ்ணாநகர் பெத்தேல் பகுதியில் அரசு டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகிறது. காந்தி நகரை சேர்ந்த முருகன் பார் நடத்தி வருகிறார். இந்த பாரில் இந்திரா நகரை சேர்ந்த குருசாமி (வயது 60) என்பவர் வேலை பார்த்து வந்தார்.
கயத்தாறு சிதம்பரம்பட்டியை சேர்ந்த மூக்கையா பாண்டியன் என்பவர் கடந்த சில தினங்களாக வந்து மது அருந்திவிட்டு பணம் கொடுக்காமல் சென்றுள்ளார். வழக்கம்போல இன்று மதியம் 2 மணியளவில் டாஸ்மாக் பாருக்கு வந்த மூக்கையா பாண்டியன், மது கேட்டுள்ளார்.
பணம் கொடுத்தால் தான் மது பாட்டில் வாங்கி வர முடியும் என்று பார் ஊழியர் குருசாமி தெரிவித்துள்ளார். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டதில் மூக்கையா பாண்டியன் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பார் ஊழியர் குருசாமியை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது
இதில், பலத்த வெட்டு காயம் அடைந்த குருசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. பாரில் மது அருந்திக் கொண்டிருந்த சிலர் கொலையை பார்த்ததும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று குருசாமியின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.சம்பவ இடத்தில் தடயங்களை கைப்பற்றிய போலீசார், தப்பி ஓடிய மூக்கையா பாண்டியனை தேடி வருகின்றனர்.