விவசாய விஞ்ஞானி எம். எஸ். சுவாமிநாதன் மரணம்
இந்தியாவின் பசுமை புரட்சியின் தந்தை என்று அழைக்கப்பட்டு வரும் தமிழகத்தைச் சேர்ந்த எம். எஸ். சுவாமிநாதன் விவசாய விஞ்ஞானி ஆவார்.
கும்பகோணத்தை சேர்ந்த சுவாமிநாதன், 1925 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி பிறந்தார். அவருடைய முழு பெயரான மான் கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன் என்பதை சுருக்கி எம் எஸ் சுவாமிநாதன் என்று அழைக்கப்படுகிறார்.
சென்னை தேனாம்பேட்டையில் வசித்து வந்த விஞ்ஞானி எம். எஸ். சுவாமிநாதன் வயது மூப்பு காரணமாக இன்று காலை 11. 20 மணி அளவில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 98. பொதுமக்கள் அஞ்சலிக்காக அவருடைய வீட்டில் உடல் வைக்கப்பட்டுள்ளது.
“பசுமைப் புரட்சியின் நாயகன்”, “தந்தை” என போற்றப்படும் சுவாமிநாதன் இந்தியாவில் பசுமைப் புரட்சியை முன் நின்று நடத்தியவர். இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் புகழ்பெற்ற ஆய்வு நிலையங்களில் பேராசிரியர், ஆராய்ச்சி நிர்வாகி மற்றும் தலைவர் போன்ற பொறுப்புகளை வகித்தவர்.
வேளாண்மை துறையில் பல்வேறு பொறுப்புகளை வகித்த அவர் மத்திய அரசின் வேளாண்மை துறை முதன்மை செயலாளராகவும் திட்டக்குழுவின் உறுப்பினர் மற்றும் துணைத் தலைவராகவும் பதவி வகித்திருக்கிறார். 2007 முதல் 2013 வரை டெல்லி மாநிலங்களவை எம்.பி. ஆகவும் சுவாமிநாதன் இருந்திருக்கிறார்.
இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் உள்ள 38 பல்கலைக்கழகங்கள் இவருக்கு மதிப்புறு முனைவர் பட்டங்களை வழங்கி இருக்கின்றன.
நமது நாட்டின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷன் ஆகிய விருதுகளை பெற்றுள்ள சுவாமிநாதன் பெருமைமிக்க மகசேசே விருது கொலம்பியா பல்கலைக்கழகத்தின் வால்வோ விருது உலக உணவு விருதுஉள்ளிட்ட 41 விருதுகளை பெற்று இருக்கிறார்.
நாட்டில் பசுமை புரட்சி ஏற்படுத்தி உணவு உற்பத்தியில் இந்தியாவை தன் நிறைவு பெற்ற நாடாக மாற்றிய பெருமைக்குரியவர் சுவாமிநாதன் நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் வேளாண்மை துறையில் அபரிமித வளர்ச்சியை ஏற்படுத்தி வேளாண் உற்பத்தி பொருள்கள் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சூழ்நிலையை உருவாக்கினார்.
சுவாமிநாதன் மனைவி மீனா கடந்த 2022 ஆம் ஆண்டு இறந்து விட்டார். இவர்களுக்கு சவுமியா, மதுரா, நித்யா ஆகிய 3 மகள்கள் உள்ளனர்.