கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளராக தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. நியமனம்
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளராக முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வுமான தளவாய்சுந்தரம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக இருந்த எஸ்.ஏ.அசோகன். ஓ.பி.எஸ். அணிக்கு சென்றுவிட்ட நிலையில் புதிய மாவட்ட செயலாளர் நியமிக்கப்படாமல் இருந்தார். இந்த நிலையில் மேலும் சில மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர். அந்த பட்டியலில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளராக தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. இடம்பெற்றார்.
இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “குமரி கிழக்கு மாவட்ட செயலாளராக கட்சியின் அமைப்பு செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான தளவாய்சுந்தரம் நியமிக்கப்படுகிறார். அவருக்கு கட்சி தொண்டர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என கூறியுள்ளார்.
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள தளவாய் சுந்தரம், முன்னாள் சுகாதார துறை அமைச்சராகவும், பொதுப் பணி துறை அமைச்சராகவும் பணியாற்றி இருக்கிறார். மேலும் ராஜ்யசபா எம்.பி.யாகவும், டெல்லியில் தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதி உள்பட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். .