விபத்தில் சிக்கிய மூதாட்டிக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உதவி
சென்னை செங்குன்றம் பகுதியில் இன்று நடைபெற்ற கட்சி நிகழ்ச்சிகளில் முன்னாள் அமைச்சர் டி,ஜெயக்குமார் கலந்து கொண்டபிறகு அடுத்த நிகழ்ச்சிக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது புழல் அருகே ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் வந்த மூதாட்டி விபத்துக்குள்ளாகி சாலையோரம் கிடந்தார். தலைப்பகுதியில் இருந்து ரத்தம் வழிந்து கொண்டு இருந்தது.
10 நிமிடங்களுக்கு மேலாக ஆம்பூலன்ஸ் வராமலும் எந்தவித உதவியும் பெறாத நிலையிலும் இருந்தார். அந்த வழியாக வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இதை பார்த்து உடனடியாக அந்த மூதாட்டியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்தார். அந்த மூதாட்டியை தூக்கி ஆட்டோவில் உட்கார வைக்க உதவிய ஜெயக்குமார், ஆட்டோ டிரைவருக்கு கட்டணத்தை கொடுத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
இது பற்றி டிஜெயக்குமார், தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ பதிவிட்டு கூறி இருப்பதாவது:-‘
செங்குன்றம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு திரும்பிய போது சென்னை புழல் அருகே மூதாட்டி ஒருவருடன் இருச்சக்கர வாகனத்தில் வந்தவர் விபத்துக்குள்ளாகி இருந்தனர். 10 நிமிடங்களுக்கு மேலாக ஆம்பூலன்ஸ் வராமலும் எந்தவித உதவியும் பெறாத நிலையிலும் இருந்தனர். பிறகு நான் ஆட்டோ ஒன்று ஏற்பாடு செய்து அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தேன். அந்த சாலையில் சென்ற யாரும் மூதாட்டி காயமுற்று கிடப்பதை கண்டும் கண்டுகொள்ளாமல் கடந்து சென்றதை பார்க்கும் போது மனிதம் மறந்து வருவதை நம்மால் உணர முடிந்தது. இன்று வேறொருவருக்கு என கடந்து போனால் நாளை நமக்கும் அது தான்! இருப்போம் சற்று ஈரத்துடன்! மருத்துவ உதவியே மகத்தான உதவி! #SaveHumanity
இவ்வாறு அவர் கூறி இருந்தார்.