வக்கீல் உள்பட 2 பேர் வெட்டிக்கொலை
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நெட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னதுரை மகன் அசோக்குமார்(வயது 29) வக்கீலான இவருக்கு திருமணமாகவில்லை. இவருக்கும் இவரது உறவினரான ராணுவ வீரர் குழந்தை பாண்டி மகன் சுரேஷ்(27) என்பவருக்கும் இடையே இட தகராறு காரணமாக பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
அசோக் குமாருக்கு ஆதரவாக அவரது பெரியப்பா துரைராஜ் (57) என்பவர் பேசிவந்தார். இந்நிலையில் வியாழக்கிழமை இரவு அப்பகுதி பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த துரைராஜை ராணுவ வீரர் சுரேஷ் சரமாரியாக வெட்டினார்.
இதை தொடர்ந்து அசோக்குமார் வீட்டுக்கு சென்றார். அங்கு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அசோக் குமாரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் படுகாயம் அடைந்த அசோக் குமார் சம்பவ இடத்திலேயே இறந்துபோனார்.
இது பற்றி அறிந்ததும் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்தனர். அவர்கள் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த துரைராஜை மீட்டு ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார்.
தென்காசி போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் மற்றும் ஆலங்குளம் போலீசார் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய சுரேஷை தேடி வருகின்றனர்.