விபத்தில் சிக்கிய இளைஞரை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்த கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அதிகாரி
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பல்வேறு திட்டப் பணிகள் குறித்த ஆய்வுகளை கூடுதல் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ் மேற்கொண்டார்.
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய பி.டி.ஓ. ராஜேஷ் குமார் மற்றும் அதிகாரிகள் சிலர் கூடுதல் ஆட்சியர் உடன் சென்று விட்டு பணிகளை முடித்து விட்டு மதியம் 3 மணியளவில் அரசு வாகனத்தில் கோவில்பட்டி திரும்பி கொண்டிருந்தனர்.
அச்சமயத்தில்
கோவில்பட்டி தலைமை தபால் நிலையம் எதிரே இரு மோட்டார் பைக்குகள் ஒன்றோடு ஒன்று நேருக்கு நேர்மோதிக் கொண்ட விபத்தில் தலை மற்றும் கண்களில் பலத்த அடிபட்டு
ரத்த காயங்களுடன் இளைஞர் ஒருவர் சாலை ஓரத்தில் மயக்க நிலையில் கிடத்தி வைக்கப்பட்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக சென்ற
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய பி.டி.ஓ. ராஜேஷ் குமார் விபத்து நிகழ்ந்திருப்பதை கண்டு தனது காரை நிறுத்தி சம்பவத்தை அறிந்து விபத்தில் சிக்கிய அந்த இளைஞரை உடனடியாக
மீட்டு தான் வந்த அரசு வாகனத்தில் ஏற்றி அரசு தலைமை மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சைக்கு உதவி செய்தார்.
சாலை விபத்தில் படுகாயம் அடைந்த இளைஞரை மீட்டு தக்க நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய பி.டி.ஓ. ராஜேஷ் குமாரின் மனித நேயமிக்க செயல் குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.