மோட்டார் சைக்கிள் விபத்தில் தலை துண்டித்து இளைஞர் பலி ; நேர்முக தேர்வுக்கு சென்று திரும்பியபோது கோவில்பட்டியில் பரிதாபம்
கன்னியாகுமரி மாவட்டம் புத்தளம் பகுதியை சேர்ந்த முருகன்என்பவரின் மகன் அஜித்(வயது 25). டிப்ளமோ படித்துள்ள இவர் பெங்களூருவில் நடந்த தனியார் நிறுவன நேர்முக தேர்வுக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றார்.
நேர்முக தேர்வை முடித்துவிட்டு, நேற்று காலை மோட்டார் சைக்கிளில் ஊருக்கு புறப்பட்டார். இரவு சுமார் 11 மணியளவில் கோவில்பட்டி இனாம் மணியாச்சி மேம்பாலத்தை கடந்து நான்குவழிச்சாலையில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக திடீரென கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோர தடுப்பில் மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட அஜித், அங்கிருந்து சாலையோர தடுப்பில் மோதினார். இதில் அவரது தலை துண்டிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து டி.எஸ்.பி. வெங்கடேஷ், காவல் ஆய்வாளர் கிங்ஸ்லி தேவானந்த், உதவி ஆய்வாளர் அரிகண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
அஜித் உடலை கைப்பற்றி பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அஜித் உடல், தலை என தனித்தனியாக கிடந்தது மட்டுமின்றி , அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் சிறிது தூரத்தில் கிடந்தது. அதிவேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்தபோது இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.