மாநிலங்களவை தேர்தல்: அ.தி.மு.க.வுக்கு பா.ஜனதா ஆதரவு
இந்தியாவில் தமிழ்நாடு உள்பட 15 மாநிலங்களில் காலியாக உள்ள 57 ராஜ்யசபா இடங்களுக்கு ஜூன் 10–ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் வரும் 24-ம் தேதி முதல் மே 31-ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்திருந்தார்.
இதனிடையே, மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டது. அதில், 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கான 4 இடங்களில், காங்கிரசுக்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மற்ற 3 இடங்களில் தி.மு.க. வேட்பாளர்களான சு.கல்யாணசுந்திரம், கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், இரா.கிரிராஜன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஜூன் 10-ம் தேதி நடைபெறும் மாநிலங்களவை தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு பா.ஜ.க. ஆதரவு அளிக்கும் என வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையை அ.தி.மு.க. நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆதரவு கோரியதாக கூறப்படுகிறது.
கோரிக்கை குறித்து கடிதம் தந்ததற்கு ஆதரவு உண்டு என அண்ணாமலை தெரிவித்ததாக அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் கூறியுள்ளார்.
இதனிடையே அ.தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் பட்டியலை தேர்வு செய்வதற்காக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.