கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் ‘நகரும் படிக்கட்டுகள்’ அமையுமா?
தென் தமிழ்நாட்டில், கோவில்பட்டி நகரம் ஒரு முதன்மையான வணிக மையம் ஆகும். நூற்பாலைகள், சிறு குறு தொழில்கள், பருத்தி, கடலை மிட்டாய், மிளகாய், வெள்ளரிக்காய் உட்பட எத்தனையோ பொருட்கள் இங்கிருந்து இந்தியா முழுவதும் செல்கின்றன.
இந்த பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள், இந்தியப் படையிலும், துணைப் படைகளிலும் பணிபுரிகின்றார்கள். கோவில்பட்டி தவிர, விளாத்திகுளம், எட்டையபுரம், ஒட்டப்பிடாரம் பகுதி மக்களும் கோவில்பட்டிக்கு வந்துதான் ரெயில் களில் பயணம் செய்கிறார்கள்.
ஒவ்வொரு நாளும், 30 ரெயில்கள், கோவில்பட்டி வழியாகசெல்கின்றன. அணித்து ரெயில்களிலும் கோவில்பட்டியில் பயணிகள் ஏறுவதும் இறங்குவதும் உண்டு. ஆனால், சில ரெயில்கள் இங்கே நிற்பது இல்லை. எனவே அனைத்து ரெயில்களும் கோவில்பட்டியில் நின்று செல்ல வேண்டும் என்று இப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
கோவில்பட்டி ரெயில் நிலையத்தின் தண்டவாளங்களைக் கடந்து மறுபுறம் செல்ல, சுமைகளுடன் நடை மேம்பால படிக்கட்டுகளில் ஏற முடியாமல், முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் பெரிதும் சிரமப்படுகின்றார்கள். எனவே, இங்கு பளுதூக்கி (லிப்ட்) வசதி செய்து தரவேண்டும், மேலும் , நகரும் படிக்கட்டுகள் (எஸ்கலேட்டர்) அமைத்துத் தருவதற்கு ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி ம.தி,மு.க.பொதுசெயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.