கோவில்பட்டியில் தேசிய ஜூனியர் ஆக்கி போட்டி நாளை தொடக்கம்; 30 அணிகள் பங்கேற்கின்றன
கோவில்பட்டி கிருஷ்ணா நகர் செயற்கை புல்வெளி ஆக்கி மைதானத்தில் 12-வது தேசிய ஜூனியர் ஆண்கள் ஆக்கி போட்டி நாளை 17-ந்தேதி தொடங்கி 28 -ந்தேதி வரை நடைபெற உள்ளது.
பகல் மற்றும் மின்னொளியில் நடக்கும் இந்த போட்டியில் மொத்தம் 30 அணிகள் கலந்து கொள்கின்றன. இப்போட்டியில் 540 வீரர்கள் பங்கு பெறுகிறார்கள். மொத்தம் 50 போட்டிகள் நடைபெற உள்ளது. இப்போட்டியில் சிறந்து விளையாடும் வீரர்கள் இந்திய அணிக்காக தேர்வு செய்யப்படுவார்கள்.
தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் இப்போட்டிகள் காலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறுகிறது.
இப்போட்டிக்காக தமிழக அணி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு கடந்த ஒரு மாதமாக உத்தரபிரதேசம் மற்றும் சென்னையில் நடந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்டனர்.
‘இது நம்ம மண்ணு, நம்ம கேம்’ என்ற ஸ்லோகனை கனிமொழி எம்.பி. ஏற்கனவே அறிமுகம் செய்து வைத்துள்ளார். ஆக்கி போட்டியின்தொடக்க விழா நாளை 17-ந்தேதி மாலை 6 மணிக்கு நடக்கிறது. போட்டியை கனிமொழி எம்.பி.மற்றும் அமைச்சர்கள் கீதா ஜீவன், மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைக்கிறார்கள்.
சிறப்பு விருந்தினர்களாக தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், விளாத்திகுளம் தொகுதி எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன், தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி , போட்டியின் அமைப்பு செயலாளரும் கே.ஆர்.கல்விக்கூடங்கள் துணை தலைவருமான கே.ஆர்.அருணாசலம் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். மேலும் கோவில்பட்டி நகராட்சி தலைவர் கருனாநிதி, தி,மு.க.ஒன்றிய செயலாளர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.
விழா முடிவில் ஆக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு தலைவர் சேகர் ஜே.மனோகரன் நன்றி கூறுகிறார்.