நாடு முழுவதும் இதுவரை இல்லாத அளவு மின் விநியோகம் – மத்திய மின்துறை அமைச்சகம்
நிலக்கரி பற்றாக்குறை காரணமாக, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மின் வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகத்தில் தூத்துக்குடி மற்றும் மேட்டூர் அனல் மின் நிலையங்களில் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய மின்சாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நேற்று மதியத்தில் நாடு தழுவிய அளவில் 201 புள்ளி பூஜ்யம் ஆறு ஆறு ஜிகாவாட் அளவுக்கு மின்சாரம் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் அதிகபட்சமாக விநியோகிக்கப்பட்ட 200 ஜிகாவாட்டைத் தாண்டி, புதிய அளவை எட்டியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதாரம் வளர்ந்து வருவதையே மின்சாரத் தேவை அதிகரிப்பு வெளிப்படுத்துவதாகவும், கடந்த மாதத்தில் எரிசக்தி தேவை 8.9 சதவீதம் அதிகரித்ததாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும், மே-ஜூன் மாதங்களில் நாடு தழுவிய அளவில் மின்சாரத் தேவை 215 முதல் 220 ஜிகாவாட் வரை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. தடையில்லாமல் மின்சாரம் வழங்குவதற்கு மத்திய அரசும், பல்வேறு தரப்பினரும் ஒருங்கிணைந்து பணியாற்றி வருவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், பல்வேறு ஆதாரங்களையும் சிறப்பான முறையில் பயன்படுத்திக் கொள்ள அனைத்து நிலைகளிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய மின்சாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.