கோவில்பட்டியில் இருந்து சென்னைக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்க கோரிக்கை
மதுரை கோட்டத்தில் உள்ள ரெயில் நிலையங்களில் கோவில்பட்டி ரெயில் நிலையம் அதிக வருவாய் தரக்கூடிய ரெயில் நிலையமாக விளங்குகிறது, நாள் தோறும் தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில் பகுதியில் இருந்து வரும் ரெயில்களில் இங்கிருந்து ஒவ்வொரு ரெயிலிலும் நூற்றுக்கணக்கான பயணிகள் சென்னை செல்கிறார்கள்.
அதே போல் சென்னையில் இருந்து கோவில்பட்டி வழியாக செல்லும் அனைத்து ரெயில்களிலும் இதே அளவு பயணிகள் கோவில்பட்டி வருகிறார்கள். தற்போது கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் இரண்டு பிளாட்பாரங்கள் உள்ளன.
கோவில்பட்டி வழியாக நிறைய ரெயில்கள் செல்கின்றன என்ற பெருமை கிடைத்தாலும் சமீபத்தில வந்தே பாரத் ரெயில் கோவில்பட்டியில் நிற்காமல் செல்வது பெருங்குறையாக இருக்கிறது. எனவே இந்த குறையை போக்கும் வகையில் இந்த ரெயில் கோவில்பட்டியில் நின்று செல்ல தென்னக் ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,
கோவில்பட்டியில் இருந்து சென்னைக்கு புதிதாக எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்க வேண்டும் இதற்கான முயற்சியில் தூத்துக்குடி எம்.பி. கனிமொழி கருணாநிதி ஈடுபட வேண்டும் என்பது கோவில்பட்டி மக்களின் பொதுவான கோரிக்கையாக இருக்கிறது.
கோவில்பட்டியில் இருந்து சென்னைக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படும் பட்சத்தில் கோவில்பட்டி கோவில்பட்டியை சுற்றி உள்ள தாலுகாக்கள் அடங்கிய தூத்துக்குடி மாவட்டம் மட்டுமின்றி விருதுநகர், திருநெல்வேலி,தென்காசி மாவட்ட மக்களும் பயன்பெறுவார்கள்.
தஞ்சாவூரிலிருந்து சென்னைக்கு தனி ரெயில் கிளம்புகிறது. அங்கு யார்டு கிடையாது அந்த ரெயிலை சர்வீஸ் செய்வதற்கு திருச்சிக்கு கொண்டு செல்லப்படுகிறது. அது போல் கோவில்பட்டியில் இருந்து சென்னைக்கு ரெயில் இயக்கம் பட்சத்தில், அந்த ரெயிலை சர்வீஸ் செய்வதற்கு திருநெல்வேலி கொண்டு செல்லலாம். எனவே 4 மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் கோவில்பட்டி-சென்னை இடையே எக்ஸ்பிரஸ் ரெயிலை இயக்க வேண்டும்.