தேசிய ஊட்டச்சத்து வார விழா: சத்தான உணவு வகைகளை தயாரித்து அரசு பள்ளி மாணவிகள் அசத்தல்
ஆரோக்கியமான வாழ்விற்கு ஊட்டச்சத்தின் அவசியத்தை வலியுறுத்தி நாடு முழுவதும் செப்டம்பர் 1ம் தேதி முதல் 7ம் தேதிவரை தேசிய ஊட்டச்சத்து வார விழா கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் தேசிய ஊட்டச்சத்து வார விழா நடைபெற்றது.
போஷன் அபியான் திட்டத்தின் கீழ் மனையியல், சத்துணவியல் பிரிவு மாணவிகள் அடுப்பில்லா சமையல் உணவு வகைகளான அவல் தயிர் சாதம், சத்து பானகங்கள். பஞ்சாமிர்தம், கடலை உருண்டை, எள்உருண்டை, வெஜி சாலட், ஜூஸ் வகைகள் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட உணவு வகைகளை கொண்டு வந்து அசத்தினர்.
பின்பு 500க்கும் மேற்பட்ட மாணவிகள் கையில் பதாகைகள் ஏந்தி விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பி பேரணியாக பள்ளி முன்பிருந்து துவங்கி எட்டயபுரம் ரோடு, ரதவீதி வழியாக மீண்டும் பள்ளியை வந்தடைந்தனர். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கல்வி அலுவலர் ஜெயபிரகாஷ் ராஜன் தலைமை தாங்கி பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியை ஜெயலதா, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் முத்து முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உதவி தலைமை ஆசிரியை உஷா ஷோஸ்பின் அனைவரையும் வரவேற்றார். குழந்தை வளர்ச்சி திட்டஅலுவலர் தாஜு நிஷா பேகம் கலந்துகொண்டு அடுப்பில்லா சமையல் உணவு வகைகளை பார்வையிட்டு போஷன் அபியான் குறித்து சிறப்புரையாற்றினார். இதில் குழந்தை வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர் முத்துமாரி, போஷன் அபியான் வட்டார ஒருங்கிணைப்பாளர் நிவேதா, சத்துணவியல் ஆசிரியர் அன்ன மரியாள் உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். இசை ஆசிரியை அமல புஷ்பம் நன்றி கூறினார்.