வட்டார விளையாட்டு போட்டி: கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி `சாம்பியன்’
தமிழக அரசின் பள்ளிக் கல்விதுறை சார்பில் 2023-24-ம் கல்வி ஆண்டிற்கான வட்டார விளையாட்டுப் போட்டிகள் கோவில்பட்டி நேஷனல் என்ஜினீயரிங் கல்லூரியில் நடந்தது. போட்டியில் கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு ஆக்கி மற்றும் கைப்பந்து போட்டிகளில் 14, 17, 19 வயது பிரிவில் முதலிடமும், மேஜை பந்து போட்டியில் 14, 17 வயது பிரிவில் முதலிடமும் பிடித்தனர்
. மேலும், எறிபந்து போட்டிகளில் 14, 17, 19, வயது பிரிவில் 2-ம் இடமும், கேரம் போட்டிகளில் 2-ம் இடமும், சதுரங்க போட்டியில் 17 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் முதலிடமும், 14 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் 2-ம் இடமும், தடகளப் போட்டியில் 3 ஆயிரம் மீட்டர், 1,500 மீட்டர் ஓட்டத்தில் மகராசி முதலிடம், மும்முறை தாண்டும் போட்டியில் சுபலட்சுமி முதலிடம் பெற்றனர்.
இதேபோன்று, 3 ஆயிரம் மீட்டர் ஓட்ட போட்டியில் நாகலட்சுமி முதலிடம், சிங்கலட்சுமி 2-ம் இடம், புவனா முனிஸ்வரி 3-ம் இடம் பெற்று குழு போட்டிகளில் 64 புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனர். இதன் மூலம் தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு போட்டிக்கு தகுதி பெற்றனர். சாதனை படைத்த மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியை ஜெயலதா, உடற்கல்வி இயக்குனர் காளிராஜ், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் முத்து முருகன், உடற்கல்வி ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பாராட்டினர்.