ரெயிலில் அடிபட்டு கல்லூரி மாணவர் பரிதாப சாவு
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகா ஜாமீன் செங்கப்படை கிராமத்தை சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவரின் மகன் கதிரேசன் (வயது 18) இவர் கோவில்பட்டி அரசு கலைகல்லூரியில் முதலாம் ஆண்டு மண்ணியல் பிரிவு படித்து வந்தார். இன்று காலை 7.30 மணிக்கு தனது வீட்டில் இருந்து கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்ற கதிரேசன், கல்லூரியிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த மைசூர்-தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியது. பொழுது மேற்படி ரயில் வண்டியில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்து போனார்.
இது பற்றி ரெயிலின் லோகோ பைலட் , வாக்கி டாக்கி மூலம் தூத்துக்குடி ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பிணமாக கிடந்த மாணவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் இதுபற்றி மேலும் விசாரணை நடத்தி வருகிறார்.
ரெயிலில் அடிபட்டு கல்லூரி மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.