விவசாய நிலங்களில் அத்துமீறும் காற்றாலை நிறுவனம்; தேசிய விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தேசிய விவசாயிகள் சங்க மாநில தலைவர் வக்கீல் ரெங்கநாயகலு தலைமையில் சிலர் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். கோவில்பட்டி ஒன்றிய தலைவர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். ஊடக பிரிவு மாவட்ட தலைவர் ராஜ்குமார் கலந்து கொண்டார். முடிவில் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலக தலைமை எழுத்தர் பொன்னம்மாளை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-‘
.தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு வட்டத்தில் மிக அதிக அளவில் காற்றாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. மேற்படி வட்டத்தில் தற்போது சிவஞனபுரம் கிராமத்தில் ஒரு தனியார் காற்றாலை நிறுவனம் (jsw) அத்துமீறி ஓடை கரைகளை உடைத்தும், சேதப்படுத்தியும் வருகிறது. அத்துடன் அமைய உள்ள காற்றாலைக்கு உரிய பாதை வசதி இல்லை. இருக்கிற வண்டிப் பாதையும் உடன் இணைந்த நீர் வழி பாதையாகவும் உள்ளது.\
இந்த பாதையில் மிகப் பெரிய காற்றாலை உபகரணங்கள் கொண்டு செல்ல முடியாது. அத்துடன் குளம் மற்றும் அரசு புறம்போக்கு இடங்களை சேதப்படுத்தி அத்துமீறி பயன்படுத்தி, விவசாயிகளுக்கு எதிராக காற்றாலை நிறுவனம் நடந்து வருகிறது.
பட்டா நிலங்களில் உள்ள விவசாயிகள் பாதிப்பு அடையக் கூடிய நிலை உள்ளது. அத்துடன் கயத்தாறு வட்டத்தில் உள்ள குளங்கள், நீர் நிலைகள், ஓடை புறம்போக்கு அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படும் நிலையும் உள்ளது பொது சமூகத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் காற்றாலைகளின் செயல்களை ஒழுங்குபடுத்த தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது விளைநிலங்கள் குறைந்து வருகிறது.விவசாய விளைபொருள்கள் உற்பத்தி குறைந்து வருகிறது. விவசாயிகள் பல்வேறு காரணங்களால் விவசாயத்தை விட்டு வெளியேறி வருகிறார்கள். இதனால் உணவு உற்பத்தி குறைந்து வருகிறது.இதனால் விலை உயர்வும் மற்றும் பஞ்சம்,பட்டினி கூட எதிர்காலத்தில் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே இது சம்பந்தமாக பல்வேறு இடங்களில் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.
ஆகவே, காற்றாலை மற்றும் பல்வேறு நிறுவனங்களால் பாதிப்பு அடைந்த விவசாயிகளின் கூட்டத்தை மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் குறை தீர் கூட்டம் நடத்த தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும். அத்துடன் காற்றாலை விஷயத்தில் லோக்கல் அதிகாரிகளின் அணுகுமுறை மெத்தனமாக உள்ளது. ஆகவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது