கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் கைது
தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ் மேற்பார்வையில் தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் மணிமாறன் தலைமையில் உதவி ஆய்வாளர் மரிய இருதயம் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது தாளமுத்துநகர் அலங்காரதட்டு குடோன் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் தூத்துக்குடி சிவந்தாகுளம் பகுதியைச் சேர்ந்த குமார் மகன் மணிகண்டன் (22), சுனாமி காலனி நேரு நகரை சேர்ந்தவர் ரமேஷ் மகன் செல்வம் (26) , ஜார்ஜ் மகன் மரிய ஜேசு விஜய் (எ) விஜய் (24) ஆகியோர் என்பதும் அவர்கள் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரிவந்தது.
உடனே 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த 300 கிராம் கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கைதுசெய்யப்பட்டவர்களில் மணிகண்டன் மீது தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் ஒரு கொலை மிரட்டல் வழக்கும், செல்வம் மீது தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும், வடபாகம் காவல்நிலையத்தில் ஒரு வழிப்பறி வழக்கும், விருதுநகர் மாவட்டம் சூலக்கரை காவல் நிலையத்தில் 3 திருட்டு வழக்குகளும், திருத்தங்கல் காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும், விருதுநகர் பஜார் காவல் நிலையத்தில் 3 திருட்டு வழக்குகள் என மொத்தம் 9 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.