தேசிய ஹாக்கி போட்டியில் விளையாடும் தமிழக மகளிர் ஹாக்கி அணி வீராங்கனைகளுடன் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் சந்திப்பு
அடுத்த மாதம் (மே) 11ந்தேதி முதல் 22ந்தேதி வரை மணிப்பூர் மாநிலம் இம்பாலில் 12 வது தேசிய அளவிலான சப் – ஜூனியர் மகளிர் ஹாக்கி சாம்பியன் ஷீப் போட்டிகள் நடைபெறுகிறது. இந்த போட்டியில் தமிழகம் சார்பில் கலந்து கொள்ள உள்ள வீராங்கனைகளுக்கு கடந்த 17ந்தேதி முதல் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள கிருஷ்ணா நகரில் தமிழ்நாடு மேம்பாட்டு ஆணைத்திற்கு சொந்தமான செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்தில் பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் 5ந்தேதி வரை இந்த பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இதில் கோவில்பட்டியை சேர்ந்த 2 வீராங்கனைகள் விளையாட தேர்வு பெற்றுள்ளனர். தலைமை பயிற்சியாளர் அன்பழகன், உதவி பயிற்ச்சியாளர் ரஸ்ணா ஆகியோர் பயிற்சி அளித்து வருகின்றனர்..
இந்நிலையில் பயிற்சி பெறும் வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், பயிற்சி பெறும் வீராங்கனைகளை இன்று நேரில் சந்தித்து அவர்கள் பெற்று வரும் பயிற்சிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைக்க தனது வாழ்த்துக்களை தெரிவித்தது மட்டுமின்றி தன்னம்பிக்கையுடன் பயிற்சி பெற்று சாதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தொடர்ந்து வீராங்கனைகளுடன் குழு புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.
இதையெடுத்து செயற்கை புல்வெளி மைதானத்துடன் இணைந்துள்ள விளையாட்டு மாணவர்விடுதிக்கு தேவைப்படும் வசதிகள் குறித்து கேட்டறிந்தார். குடிநீர் வசதி, மின்சார வசதி மற்றும் விளையாட்டு மாணவர் விடுதியில் மாணவர்களுக்கு கட்டில் வசதி செய்ய வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட ஹாக்கி கழகம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. மைதானம் மற்றும் மாணவர் விடுதிக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்று மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார்.
இதனை தொடர்ந்து கோவில்பட்டி நகராட்சி சார்பில் ராமசாமிதாஸ் பூங்காவில் நடைபெற்று வரும் அறிவுசார் மைய பணிகள் மற்றும் காந்திநகர் – நடராஜபுரம் இடுகாடு பகுதி வரை சாலை அமைக்கும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு மேற்க்கொண்டார்.
அப்போது கோட்டாட்சியர் சங்கரநாரயணன், நகர்மன்ற தலைவர் கா.கருணாநிதி, தாசில்தார் சுசிலா, சமூக நல பாதுகாப்பு திட்ட தாசில்தார் மணிகண்டன்,நகராட்சி ஆணையர் ராஜாராம், மாவட்ட விளையாட்டு அலுவலர் பேட்ரிக் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.