தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலராக கடம்பூர் செ.ராஜு எம்எல்ஏ ஒரு மனதாக மீண்டும் தேர்வு.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளராக கடம்பூர் செ.ராஜு எம்எல்ஏ போட்டியின்றி ஒரு மனதாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
அதிமுக அமைப்புத் தேர்தல் மூன்று கட்டமாக ஏற்கனவே முடிவடைந்த நிலையில் திங்கள் கிழமை நான்காம் கட்டமாக தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளர், அவைத் தலைவர், இணைச் செயலாளர், துணைச் செயலாளர், பொருளாளர், பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் 12 மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கு கோவில்பட்டியில் வேலவன் திருமண மண்டபத்தில் தேர்தல் நடைபெற்றது.
இத்தேர்தலுக்கு அதிமுக தலைமைக் கழகம் சார்பில் வடசென்னை (கிழக்கு) மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ், வழக்குரைஞர் பிரிவு துணைச் செயலாளர் ஆர்.மதுரைவீரன் ஆகியோர் தேர்தல் ஆணையர்களாக நியமிக்கப்பட்டனர். அதிமுக தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளர் பதவி உள்பட அனைத்து பதவிகளுக்கும் திங்கள்கிழமை வேட்புமனுக்கள் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து பூர்த்தி செய்யப்பட்ட வேட்புமனுக்களும் பெறப்பட்டன.
இந்நிலையில் அதிமுக தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளர் பதவிக்கு கடம்பூர் செ.ராஜு எம்எல்ஏ மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்திருந்ததால் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் பிரிவு ஆணையர்கள் தெரிவித்தனர். மேலும் அதிமுக தலைமைக் கழகம் சார்பில் தேர்தல் முடிவுகள் முறைப்படி அறிவிக்கப்படும் என்றனர்.
தொடர்ந்து எட்டயபுரத்தில் இருந்து ரத்தினம் தலைமையில் சுமார் 50க்கும் மேற்பட்ட திமுக கட்சியினர் அதிமுகவில் கடம்பூர் செ.ராஜு எம்எல்ஏ முன்னிலையில் தங்களது உறுப்பினர் அட்டையை ஒப்படைத்து இணைந்தனர். அப்போது எட்டயபுரம் பேரூராட்சி அதிமுக செயலாளர் ராஜ்குமார் உடனிருந்தார்.
முன்னதாக, நான்காம் கட்ட அதிமுக அமைப்புத் தேர்தலை முன்னிட்டு கடம்பூர் செ.ராஜு எம்எல்ஏ முன்னாள் முதலமைச்சர்களான அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சிகளில் மாநில எம்.ஜி.ஆர். இளைஞரணி துணைச் செயலாளர் சீனிராஜ், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவி சத்யா, முன்னாள் எம்எல்ஏ-க்கள் என்.கே.பெருமாள்,மோகன், சின்னப்பன், நகர செயலாளர் விஜயபாண்டியன், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவர் பழனிச்சாமி, அதிமுக ஒன்றியச் செயலாளர்கள் அய்யாத்துரைப்பாண்டியன், வினோபாஜி, அன்புராஜ், வண்டானம் கருப்பசாமி, மகேஷ், வழக்குரைஞரணி வடக்கு மாவட்டச் செயலாளர் சிவபெருமாள், நகரச் செயலாளர் விஜயபாண்டியன், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்டச் செயலாளர் துறையூர் கணேஷ்பாண்டியன் மாவட்ட மாணவரணி துணைத் தலைவர் செல்வக்குமார் மணியாச்சி கூட்டுறவு சங்கத்தலைவர் மகேஷ்குமார், மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ், மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் சுதா என்ற சுப்புலெட்சுமி அம்பிகா வேலுமணி,ஆபிரஹாம் அய்யாத்துரை ,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.