மொபட் மீது டிராக்டர் மோதிய விபத்தில் கோவில்பட்டி மாணவி பலி
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள மந்திதோப்பு ராஜகோபால் நகரை சேர்ந்தவர் குமார் (வயது 42). இவர் தனது மனைவி மற்றும் மகள் ராஜேஸ்வரி (11), மகன் ராமு (8) ஆகியோருடன் நேற்று முன்தினம் தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே சாம்பவர்வடகரையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று இருந்தார்.
.ராஜேஸ்வரி 7-ம் வகுப்பு படித்து வந்தாள். இரவில் கோவில் திருவிழாவை பார்ப்பதற்காக குமார் தனது குழந்தைகளுடன் மொபட்டில் உறவினர் வீட்டில் இருந்து புறப்பட்டார். அங்குள்ள மின்வாரிய அலுவலகம் அருகில் சென்றபோது அந்த வழியாக வந்த டிராக்டர் எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியது. இதில் ராஜேஸ்வரி தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தாள். சிறுவன் ராமு பலத்த காயம் அடைந்தான். குமார் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
தகவல் அறிந்த சாம்பவர்வடகரை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, காயமடைந்த ராமுவை சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டான். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் பலியான ராஜேஸ்வரியின் உடல் பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, டிராக்டர் டிரைவர் மாரிசெல்வத்தை கைது செய்தனர்.