• May 14, 2024

வரதட்சணை கொடுமை: வீட்டில் தடுப்பு சுவர் அமைத்து மனைவியை சிறை வைத்த கணவர்

 வரதட்சணை கொடுமை: வீட்டில் தடுப்பு சுவர் அமைத்து மனைவியை சிறை வைத்த கணவர்

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் புல்லாரெட்டி ஸ்வீட்ஸ் என்ற பெயரில் 200 க்கும் மேற்பட்ட இனிப்பு மற்றும் பலகார கடைகளை நடத்தி வருபவர் ராகவாரெட்டி.
இவரது மகன் ஏக் நாத் ரெட்டிக்கும் பெங்களூருவை சேர்ந்த தொழில் அதிபரின் மகள் பிரகன்யாவுக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 7 வயதில் மகள் உள்ளார்.

திருமணத்தின் போது மாப்பிள்ளைக்கு ரூ, 75 லட்சம் ரொக்கம். ரூ.9.5 லட்சம் மதிப்பில் தங்கம், வெள்ளி நகைகள், ரூ.35 லட்சம் மதிப்பிலான வைர நெக்லஸ் அது தவிர நாத்தனார் சீதனம் என்ற பெயரில் தனியாகவும் வரதட்சணை கொடுக்கப்பட்டு உள்ளது.

ஏக் நாத் ரெட்டிக்காக, தந்தை ராகவாரெட்டி அவரது தாய் பார்வதி, சகோதரி ஸ்ரீவித்யா ஆகியோர் வரதட்சணையாக மொத்தம் 1 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்களை பேரம் பேசி பெற்றதாக கூறப்படுகிறது. மேலும் ஐதராபாத்தில் வணிக வளாகம் ஒன்றை கூடுதல் வரதட்சணையாக கேட்டுள்ளனர். அது மட்டும் பிரகன்யாவின் பெற்றோர் வாங்கி கொடுக்கவில்லை.

இது தொடர்பாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. 7 வயதில் மகள் உள்ள நிலையில் ஏக் நாத் ரெட்டி கூடுதல் வரதட்சணை கேட்டு தராததால் தனது மனைவியை விவாகரத்து செய்ய முயன்றார்.

2021 ஆம் ஆண்டு அதற்கான நடவடிக்கைகளை ஏக் நாத் ரெட்டி மேற்கொண்ட நிலையில் அவரது விவாகரத்து வழக்கு தள்ளுபடியானதால் மனைவியுடன் ஒரே வீட்டில் வசிக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ஏக்நாத் ரெட்டி கடந்த 10 ந்தேதி வீட்டின் கீழ் பகுதியில் தனது மனைவி மற்றும் மகள் தங்கி இருக்கும் அறையின் மின்சாரத்தையும், தண்ணீர் இணைப்பையும் துண்டித்தார்.

இருவரையும் சிறைவைக்கும் எண்ணத்தில் அவர்களது அறையில் இருந்து வெளியேற விடாமல் தடுப்புச்சுவர் ஒன்றை அமைத்த ஏக் நாத் ரெட்டி மனைவி, மகளை கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தான் வீட்டிற்குள் சுவர் கட்டி சிறைவைக்கப்பட்டுள்ளதாக தனது பெற்றோருக்கு பிரகன்யா. தெரிவித்துள்ளார்.
இதையடுத்து போலீசாருடன் ஏக் நாத் ரெட்டியின் வீட்டிற்கு விரைந்த பெற்றோர், அந்த தடுப்பு சுவரை உடைத்து பிரகன்யாவையும் அவரது 7 வயது மகளையும் மீட்டனர்.

மேலும் மே 10ம் தேதி தனது கணவரும், அவரது பெற்றோரும் சேர்ந்து தன்னை தலையணையால் அமுக்கி கொலை செய்ய முயன்றதாகவும் பிரகன்யா புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசில் புகார் அளிக்க முயன்றபோது, ​​தனது மகளையும், பெற்றோரையும் கொன்று விடுவதாக மிரட்டியதாக அவர் கூறியுள்ளார்.

பிரகன்யா புகாரின் அடிப்படையில், போலீசார் அவரது கணவர் மற்றும் மாமியார் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *