தேர்தலில் மத்திய, மாநில அரசுகளுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் ; முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
சென்னை ராயபுரத்தில் வடசென்னை நாடாளுமன்ற தொகுதி தலைமை தேர்தல் பணிமனையை கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர் மற்றும் வடசென்னை தொகுதி பொறுப்பாளருமான டி.ஜெயக்குமார் திறந்து வைத்தார்.
பின்னர் எம்.ஜி.ஆர்.,ஜ ஜெயலலிதா ஆகியோரது திருவுருவ படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் கூறியதாவது,;
மத்தியிலும், மாநிலத்திலும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சர்வாதிகார ஆட்சிக்கு இந்த தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். வேட்பு மனு தாக்கல் செய்யும் நடைமுறையை திமுக அரசும், தேர்தல் ஆணையமும் முறை தவறி நடத்தியுள்ளது. தேர்தல் ஆணையத்துக்கு திமுக அரசும், திமுக நிர்வாகிகளும் முழுமையான ஒத்துழைப்பை அளிப்பதில்லை.
கடந்த 25ஆம் தேதி அதிமுக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்ய சென்ற பொழுது, திமுகவினர் தேர்தல் நடத்தை விதிகளை மீறி செயல்பட்டனர்.ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் என்பதற்காக விதிகளை மீறி திமுக அமைச்சர் சேகர்பாபுவும், அவரது ஆதரவாளர்களும் செயல்பட்டார்கள்.
வேட்பு மனு தாக்கல் செய்யும் பொழுது ஐந்து பேர் மட்டுமே உள்ளே இருக்க வேண்டும் என்ற தேர்தல் விதி இருக்கும்பொழுது, விதிகளை மீறி அவர்கள் நடந்து கொண்டதற்கு உரிய வீடியோ ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாகவும், அதன்படி மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி திமுக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுப்போம்
தமிழிசை சவுந்தர்ராஜனும், தமிழச்சி தங்கபாண்டியனும் தேர்தல் களத்தில் கட்டி அணைப்பதையும், அக்கா – தங்கை உறவு கொண்டாடுவதையும் பார்க்கும் பொழுது திமுகவினர் பாஜகவுடன் தொடர்பில் இருப்பது நன்றாக தெரிகிறது.
கன்னியாகுமரியில், காங்கிரஸ் வேட்பாளராக களம் இறங்கியுள்ள தன் தம்பி வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவும், தூத்துக்குடியில் கனிமொழி வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவும், அங்கெல்லாம் போட்டியிடாமல் தமிழிசை சவுந்தர்ராஜன் தென் சென்னையில் போட்டியிடுகிறார்.மக்களிடம் பிளவை ஏற்படுத்தி அதன் மூலம் ஆதாயம் தேட முயற்சிக்கும் பாஜக அரசுக்கு இந்த தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.
திருவல்லிக்கேணியில் நேற்று வாக்கு சேகரிக்க சென்ற தென் சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனுக்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் வெளியாகியுள்ளது. இதை பார்க்கும் பொழுது, தென்சென்னை மட்டுமல்ல திமுக வேட்பாளர்கள் எங்கு சென்றாலும் அவர்களுக்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு இருப்பதை பார்க்க முடிகிறது.
முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.