முப்பிலிவெட்டி அய்யனார் கோவிலில் பங்குனி திருவிழா கோலாகலம்
ஓட்டப்பிடாரம் தாலுகா முப்பிலிவெட்டி கண்மாய்க் கரையில் அமைந்துள்ள ஸ்ரீ பூர்ணாதேவி, புஷ்கலா தேவி சமேத மயிலேறும் பெருமாள் அய்யனார் மற்றும் மயிலேறும் பத்திரகாளி அம்மன் கோவில் பங்குனி உத்திரம் திருவிழா 2 நாட்கள் கோலாகலமாக நடைபெற்றது.
முதல் நாள் காலை 6.30 மணிக்கு கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. 10 மணிக்கு பத்திரகாளி அம்மன் கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம், முளைப்பாரி, மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக அய்யனார் கோவிலுக்கு வந்தனர்.
தொடர்ந்து மதியம் 12 மணிக்கு அய்யனாருக்கு 16 வகையான அபிஷேக அலங்காரம் மற்றும் தீபாராதனையும், மாலை 3 மணிக்கு கன்னி பூஜையும் நடந்தது,
சில சமுதாய மக்களுக்கு குலதெய்வமாக இருப்பதால் பங்குனி உத்திர திருவிழாவில் கோவில்பட்டி, தூத்துக்குடி, ஏரல் மற்றும் விருதுநகர், மதுரை, திருச்சி, திருத்தணி,சிவகாசி, சென்னை, திருக்கழுக்குன்றம், புதுச்சேரி ,மும்பை போன்ற ஊர்களில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டனர்,
மாலை 5 மணிக்கு 216 திருவிளக்கு பூஜை நடந்தது இரவு 9 மணிக்கு வான வேடிக்கை நடைபெற்றது.. பின்னர் இரவு 10 மணிக்கு கருப்பசாமி வேட்டைக்கு செல்லும் நிகழ்ச்சி தொடங்கியது.
இரண்டாம் நாள் காலை 10 மணிக்கு சக்தி கிடா மற்றும் சேவல் அர்ப்பணித்தல் நடந்தது. மதியம் அசைவ சாப்பாடு விருந்து நடந்தது,
பத்திரகாளி அம்மன் கோவில்
.இதே போல் ஸ்ரீ மயிலேறும் பத்திரகாளி அம்மன் கோவிலில் முதல் நாள் பத்திரகாளி அம்மனுக்கு 16 வகை அபிஷேக அலங்காரம், தீப ஆராதனை நடைபெற்றது. இரவு 9 மணிக்கு வான வேடிக்கை, மாவிளக்கு , அக்னி சட்டி எடுத்தல், கும்மி அடித்தல், பாட்டு பாடுதல், விளையாட்டு போட்டிகள் நடந்தன..
இரண்டாம் நாள் காலை 7 மணிக்கு பத்திரகாளி அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு நடந்தது. காலை 9 மணிக்கு அம்மனுக்கு சக்தி கிடா, சேவல், முடி காணிக்கை செலுத்துதல் நடந்தது.
விழா ஏற்பாடுகளை ஸ்ரீ மயிலேறும் பெருமாள் அய்யனார் தேவஸ்தான தலைவர் எஸ்.தங்கவேல், துணை தலைவர்கள் தம்பிதுரை ,ராமராஜா, செயலாளர் முருகேச பாண்டி, துணை செயலாளர்கள் தர்மராஜ், பாலகிருஷ்ணன்,அய்யனார், பொருளாளர் டி.ரவிச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.