கோவில்பட்டி பஸ் நிலையத்தில் மது போதையில் ரகளை: கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு
கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையம் எப்போதும் பரபரப்புடன் இயங்கும். நேற்க்று மாலை நேரத்தில் தனியார் கல்லூரி மாணவர்கள் சிலர் பஸ்சுக்காக காத்திருந்தனர். அப்போது அய்யனேரியை சேர்ந்த கார்த்திக் (வயது 19) என்பவர் மது போதையில் மாணவர்களுடன் தகராறில் ஈடுபட்டார். அப்போது மாணவர்கள் அனைவரும் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரை தாக்க முயன்றனர். இதனால் கார்த்திக் அங்கு இருந்து தப்பி சென்று விட்டார்.
சிறிது நேரத்தில் கார்த்திக் அவரது நண்பர்களுடன் தன்னை தாக்க வந்த மாணவர்களை தேடி வந்தார். அப்போது அந்த மாணவர்கள் அங்கு இல்லை. அதேசமயம், பஸ் நிலையத்தில் அதே கல்லூரியில் படிக்கும் கடலையூரை சேர்ந்த வைரமுத்து (வயது 19) என்பவர் நின்று கொண்டிருந்தார்.
கார்த்திக் தலைமையில் வந்தவர்கள் வைரமுத்துவை சூழந்து தாக்கினர். அவர்களில் ஒருவர் அரிவாளால் = வெட்டினர். அதை தடுத்த வைரமுத்துவுக்கு கையில் அரிவாள் வெட்டு விழுந்தது. அவரது அலறல் சத்தம் கேட்டவுடன் பயணிகள் திரண்டனர். மேலும் பெண்கள், மாணவிகள் பீதியுடன் அங்கும் இங்குமாக ஓடினர்.
இதை பார்த்த கார்த்திக் தலைமையிலான கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். காயமடைந்த வைரமுத்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். அவர் கொடுத்த புகாரின் பேரில் கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து, அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது வீரவாஞ்சி நகரை சேர்ந்த கார்த்தி என்ற அட்டுக் கார்த்தி (வயது19), சின்னமணி (வயது 24), அய்யனேரியை சேர்ந்த கார்த்திக் (வயது19) ஆகியோர் மாணவரை அரிவாளால் வெட்டியது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி, சப்- இன்ஸ்பெக்டர் ஹரிகண்ணன் மற்றும் போலீசார் 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்போது கல்லூரி மாணவனை அரிவாளால் வெட்டும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கைதாகியுள்ள கார்த்தி என்ற அட்டு கார்த்தி மீது ஏற்கனவே சில வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.