காத்து வாக்குல ரெண்டு காதல் எப்படி இருக்கிறது?
படம் நெடுக நயன்தாராவை காட்டிலும் சமந்தா, ரசிகர்கள் மத்தியில் கூடுதல் கவனம் பெறுகிறார். படத்தின் ஆரம்பம் முதல் கடைசி வரை ரசிகர்களை சிரிக்க வைத்துள்ள விக்னேஷ் சிவனுக்கு வெற்றி கிடைத்துள்ளது.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியாகியுள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் எப்படி இருக்கிறது என்பதை இங்கே குறிப்பிடுகிறோம்.
விஜய் சேதுபதி-சமந்தா-நயன்தாரா என ரசிகர்களை சுண்டியிழுக்கும் நட்சத்திர பட்டாளம் ஒருபக்கம் என்றால், மயக்கும் அனிருத்தின் பாடல்கள் மறுபக்கம் என வானளாவிய எதிர்பார்ப்புக்களுடன் வெளியாகியுள்ளது காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம். விக்னேஷ் சிவன் அடுத்ததாக அஜித் நடிப்பில் திரைப்படத்தை இயக்க உள்ளதால், இந்த திரைப்படம் அஜித் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமா வழக்கமாக பார்த்து பழகிய காதல் கதைகளில் இருந்து மாறுபட்டு ஒரு ஆண் இரு பெண்களுக்கு இடையே உள்ள காதல் மற்றும் மோதலை இந்த திரைப்படம் காட்டுகிறது. சற்று பிசகினாலும் ஆபாசமாகவும் விரசமாகவும் ஆகிவிடும் ஆபத்து இருக்கும் இந்த கதையை, கத்திமேல் நடப்பது போல முழுக்க முழுக்க நகைச்சுவையாக கையாள முயற்சி செய்துள்ளார் விக்னேஷ் சிவன். படத்தின் முதல் பாதி முழுவதும் ஒரு நல்ல காதல் படத்தை பார்க்கும் அனுபவத்தையும், படத்தின் இரண்டாவது பாதி இரண்டு பெண்களுக்கும் உள்ளே உள்ள பொஸசிவையும் நகைச்சுவையாக பதிவு செய்கிறது.