வெளிநாட்டில் செவிலியர் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்தவர் கைது
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வீரபாண்டியபட்டினம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் அமெரிக்காவில் உள்ள ஒரு மருத்துவமனையில் செவிலியர் வேலை வாய்ப்பு உள்ளதாக வந்த விளம்பரத்தை பார்த்து, அதில் குரிப்பிட்டிருந்தவர்களை தொடர்பு கொண்டார். அப்போது அவர்கள் செவிலியர் வேலைக்கான பதிவு கட்டணம், விசா செயல்பாடு மற்றும் கஸ்டம்ஸ் கிளியரன்ஸ் என பல்வேறு காரணங்களை கூறி அந்த பெண்ணிடம் ரூபாய் 10,65,000 மோசடி செய்து ஏமாற்றியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக பாதிக்கபட்ட பெண் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், தூத்துக்குடி சைபர் குற்றப் பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன் மேற்பார்வையில் சைபர் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் சிவசங்கரன் தலைமையிலான தனிப்படை அமைத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டதில் கர்நாடக மாநிலம் பெங்களூரு வடக்கு, கே.ஆர்.புரம் பகுதியை சேர்ந்த அருண் கே. ராஜன் என்பவர், சிலருடன் சேர்ந்து போலியான ஆவணங்களை உருவாக்கி போலியான விளம்பரம் செய்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து தனிப்படை போலீசார் நேற்று (29.6.2022) பெங்களூருவில் அருண் கே. ராஜனை கைது செய்தனர்.
இந்த மோசடியில் நைஜீரியா நாட்டை சேர்ந்த டென்னீஸ் என்பவர் உள்பட பலர் இந்த மோசடியில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் சைபர் குற்றப் பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.