கோவில்பட்டி மருத்துவ அதிகாரிகள் மீது டாக்டர் தம்பதியர் புகார்
தூத்துக்குடி மாவட்டம் கீழஈரால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்களாக ஆனந்த் மற்றும் வனிதா தம்பதியர் பணியாற்றி வருகிறார்கள். டாக்டர் ஆனந்த் நடமாடும் மருத்துவராக இருக்கிறார்.
இந்த நிலையில் நேற்று டாக்டர் தம்பதியர் தங்களது 5 வயது மகனுடன் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பணியில் இருந்த போலீசார், அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர
அப்போது அவர்களிடம் கோவில்பட்டி மருத்துவதுறை அதிகாரிகள் 2 பேர் பற்றி பல்வேறு புகார்களை தெரிவித்தனர். இதை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர்
முன்னதாக டாக்டர் வனிதா செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஜாதி ரீதியாகவும், மன ரீதியாகவும் எங்கள் இருவரையும் கடுமையான துன்புறுத்தலுக்கு ஆளாக்குகிறார்கள். தேவை இல்லாமல் மெமோ கொடுக்கிறார்கள். சென்னையில் உள்ள எங்களது இயக்குனரிடமும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடமும் புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தொடர்ந்து நியாயம் கிடைக்காததால் இன்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் செய்கிறோம்” என்றனர்.
.